கோவையில் நாய் குட்டியை காப்பாற்ற முயன்றவர்.. யாருமே செய்யக்கூடாத சிறு தவறு
கோவை: கோவை அன்னூரில் ஒரு லேத் பட்டறையில் தங்கியிருந்த ஜீவராஜேஷ் செய்த தவறை யாருமே தப்பி தவறிக்கூட செய்துவிட வேண்டாம். பாம்புகள் உங்கள் வீடுகளில் வந்தால் அல்லது உங்கள் கடை அல்லது தொழிற்சாலைகளில் வந்தால், அதனை அடிக்க முயற்சிக்காமல், நீங்கள் பாம்பு பிடி வீரர்களுக்கு அழைக்கலாம். உயிரை காப்பாற்ற வேண்டும் என்றால் கவனமாக செயல்பட வேண்டும். ஜீவராஜேஷ் செய்த சிறுதவறு, அவருக்கு எமனாகி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் புளியக்குடி பகுதியைச் சேர்ந்த 28 வயதாகும் ஜீவராஜேஷ் என்பவர் வெல்டிங் தொழிலாளி ஆவார். இவர் அண்மையில் கோவை கரியாம்பாளையம் பகுதியில் உள்ள லேத் பட்டறைக்கு வேலை கேட்டு வந்தார். அப்போது ஆர்டர் குறைவாக வருவதால் வேலை இல்லை என்று கூறியிருக்கிறார்கள்.

அங்கு வேலை செய்து வந்த பழக்கத்தில் அன்று ஒருநாள் மட்டும் அனுமதி கேட்டு தங்கியிருக்கிறார்.. அவர் தங்கி இருந்த அறையின் அருகே நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. அப்போது திடீரென நாய் குறைக்கும் சத்தம் கேட்டு அறையில் இருந்த ஜீவராஜேஷ் சென்று பார்த்துள்ளார். அப்போது நாய்க்குட்டிகளை பாம்பு கடிக்க முயன்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த அவர் உடனே அருகில் கிடந்த கம்பை எடுத்து பாம்பை அடித்தார். பின்னர் அந்த பாம்பு இறந்துவிட்டதா என தூக்கிப் பார்த்துள்ளார்., திடீரென அந்த பாம்பு ஜீவராஜேஷின் கையில் கடித்தது.
இதையடுத்து அவர் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேலை கேட்டுவந்த இடத்தில் பாம்பிடமிருந்து நாய்க்குட்டிகளை காப்பாற்ற சென்று, தன் உயிரைத் தொழிலாளி பறிகொடுத்திருக்கிறார்.
மக்கள் அறிய வேண்டியவை
பாம்புகள் பொதுவாக மனிதர்களைத் தானாக வந்து கடித்துவிடாது. ஆனால், தன்னை யாராவது தாக்கும்போது அல்லது உயிருக்கு ஆபத்து வரும்போது, தன்வசம் உள்ள முழு விஷத்தையும் ஒரே அடியாகச் செலுத்திவிடும் இயல்புடையது. ஜீவராஜேஷ் அந்தப் பாம்பை அடித்ததால், அது கடும் ஆக்ரோஷத்தில் இருந்திக்கிறது,
அவர் செய்த மிகப்பெரிய தவறு, அடித்த பின்பு அது 'இறந்துவிட்டது' என நினைத்து கைகளால் தூக்கியதுதான். பாம்புகள் அடிபட்ட நிலையில் பல மணிநேரம் அசைவில்லாமல் கிடக்கும். ஆனால், தொடும்போது அதன் தசைநார்களின் எதிர்வினை காரணமாக மின்னல் வேகத்தில் கடித்துவிடும்.
பொதுவாக சாகும் நிலையில் இருக்கும் பாம்புகள், தான் இனி பிழைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து, தன்னிடம் எஞ்சியிருக்கும் முழு விஷத்தையும் செலுத்திவிடும். இதனால் தான் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றிப் போயிருக்கிறது. பாம்பு கடித்தால் அல்லது அடித்தால், அதை எக்காரணம் கொண்டும் கைகளால் தொடவோ அல்லது முகத்தின் அருகில் கொண்டு செல்லவோ கூடாது. இறந்துவிட்டதாக நினைக்கும் பாம்புகள் கூட கடித்த பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. நாய்க்குட்டிகளைக் காப்பாற்ற நினைத்த அவரது மனிதாபிமானம் மிகப்பெரியது. ஆனால் ஒரு நொடி கவனக்குறைவு அவரது உயிரைப் பறித்துவிட்டது மிகவும் சோகமானது.














Click it and Unblock the Notifications