கோவையில் கதவு இல்லாத இரட்டைக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டது ஏன்.. மாநகராட்சி விளக்கம்
கோவை: கோவையில் கதவு இல்லாத இரட்டைக் கழிப்பிடங்கள் கட்டப்பட்டது ஏன் என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதை போல மனிதர்களின் குணாதிசயங்களும் மாறுபடுகின்றன. 5 விரல்களும் ஒன்று போல் இருக்காதல்லவா? அது போல்தான் மனிதர்களின் குணங்களும்!
சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், ஒருவர் கலகலப்பை விரும்புவார். மற்றொருவர் தனிமையை விரும்புவார், இன்னொருவர் சூழலுக்கு தகுந்தாற்போல் இரண்டையும் விரும்புவார். இவை வளரும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.

துணைக்கு ஆள்
எங்குச் சென்றாலும் துணைக்கு ஒரு ஆள் வேண்டும். யாரும் வேண்டாம், தனிமையே எனக்கு துணை என இருப்போரும் இருப்பர். ஒரு நீண்ட நெடிய பஸ் பயணமோ, ரயில் பயணமோ இருந்தாலும் பேச்சுத் துணைக்கு யாராவது இருந்தால் பயண களைப்பே தெரியாது. நம்முடன் யாரும் வராவிட்டாலும் வந்திருப்பவர்களை நல்லவர் கெட்டவர் என பிரித்து பகுத்தாய்வு செய்து அவர்களுடன் நாம் பேச்சு கொடுப்போம்.

வாக்கிங்
இவ்வளவு ஏன் வாக்கிங் போக வேண்டும் என்றால் கூட பேச்சு துணைக்கு ஆள் இருந்தால் டான் என டைமுக்கு எழுந்து செல்வோம். இப்படி ஒரே பக்கத்து பக்கத்து இருக்கையில் அமர்வது என்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு படி மேலே போய் இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட அருகருகே உட்கார்ந்து கொண்டு போகும் செட் அப்பை கேள்விப்பட்டுள்ளீர்களா?

கோவை கூத்து
ஆம் கோவை மாவட்டத்தில்தான் இந்த கூத்து! கோவை மாவட்டம் 70-ஆவது வார்டு ராஜீவ் காந்தி நகர், அம்மன் குளம் பகுதியில் வித்யா நிகேதன் பள்ளியில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அதிமுக ஆட்சி காலத்தில் பொதுக் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே கழிவறையில் இருவர் அருகருகே அமர்ந்து பயன்படுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கதவுகளே இல்லை.

கதவுகள் இல்லை
இது போல் அருகருகே கழிப்பறைகள் எதற்காக கட்டப்பட்டது என தெரியவில்லை. குழந்தைகளுக்காக கட்டப்பட்டுள்ளது என்றாலும் கூட பொது இடத்தில் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்துவார்கள் என்பதை எப்படி சொல்ல முடியும். ஒரே குடும்பத்தை சேர்ந்த பெரியவர்களாக இருந்தாலும், இவ்வளவு ஏன் கணவன்- மனைவியாக இருந்தாலும் சேர்ந்து இயற்கை உபாதையை கழிக்க முடியுமா?

கோவை மாநகராட்சி விளக்கம்
ஏதோ ஒரு மனநிலையில் கட்டிவிட்டாலும் ஒரு நியாயம் வேண்டாமா என நெட்டிசன்கள் கேட்கிறார்கள். அதாவது பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்தாலும் குறைந்தபட்சம் இடிக்காமலாவது உட்கார வேண்டாமா? என கேள்விகள் எழுப்பப்பட்டது. இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கதவு இல்லாத இரட்டை கழிப்பிடங்கள் அம்மன்குளம் அருகே கட்டப்பட்டது. குழந்தைகளுக்காக கதவுகள் இல்லாமல் அமைக்கப்பட்டது இரட்டைக் கழிப்பிடம். பெரியவர்கள் கண்காணிப்பில் குழந்தைகள் பயன்படுத்தவே கதவுகள் போடப்படவில்லை. குழந்தைகளுக்கான இரட்டை கழிப்பிடத்தை பெரியவர்களுக்கான சிறுநீர் கழிப்பிடமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications