செந்தில் பாலாஜியுடன் தொடர்பு! கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை! யார் இவர்கள்? பரபர தகவல்
கோவை: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கோவையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர். கோவையில் உள்ள டாஸ்மாக் சூப்பர்வைசரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில் அதுபற்றி பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்ற புகாரில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு பிறகு அவரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. தற்போது செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் உள்ளார். அவருக்கு ஆகஸ்ட் 8 ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சிஆர்பிஎப் வீரர்களுடன் கரூரில் உள்ள சங்கரின் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர். சங்கர் வீடு உள்பட கரூரில் மொத்தம் 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் இன்று கோவையிலும் அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கி உள்ளனர். கோவையில் மொத்தம் 3 இடங்களில் சிஆர்பிஎப் போலீஸ் உதவியுடன் சோதனைகள் நடந்து வருகிறது. அதன்படி கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்துபாலன் என்பவரது வீட்டில் சோதனை நடக்கிறது.
இந்த முத்துபாலன் டாஸ்மாக் சூப்பர்வைசராக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இன்று காலை 2 கார்களில் வந்த அமலாக்கத்துறையினர் அவரது வீட்டில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் அருண் அசோசியேட் எனும் கட்டுமான நிறுவனத்திலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளரான அருண் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. இவ்வாறு கோவையில் மட்டும் 3 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் முத்துபாலன் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் அருண் உள்ளிட்டவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கம் என கூறப்படுகிறது. குறிப்பாக அருண் அசோசியேட் நிறுவனம் கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜின் குடும்பத்தினருக்கு பங்களா கட்டி கொடுத்து வரும் நிறுவனம் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் அமலாக்கத்துறையினர் அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications