அடிக்கடி ஆஃப் ஆகும் சிசிடிவி.. எனக்கென்னமோ சந்தேகமாக தான் இருக்கு! ஈசி மீது எடப்பாடிக்கு வந்த டவுட்!
கோவை: நடந்து முடிந்த தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை திமுக அரசு திட்டமிட்டு நீக்கி உள்ளதாகவும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக்கூத்தாக இருக்கிறது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 17ஆம் தேதி மறைந்த முன்னாள் மேயர் தா. மலரவன் வீட்டிற்கு இன்று வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மலரவன் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவருடன் எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், ஏகே செல்வராஜ், விபி கந்தசாமி, சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பலர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மலரவன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்
எடப்பாடி பழனிசாமி: பின்னர் செய்தியாளரிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த மலரவன், கோவை மேயராகவும், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்த காலத்தில், பல்வேறு கோவை நகரின் வளர்ச்சி திட்டங்களை செய்து கொடுத்தவர் என புகழாரம் சூட்டினார். மேலும்,” கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சிலந்தை ஆற்றில் தடுப்பணை கட்டி வருவதாகவும், இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவதுடன், விவசாய தேவைக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் கர்நாடக அரசும் மேக தாதுவில் தடுப்பணை கட்டும் பணியை தொடங்கி இருக்கிறது. இதே போல் ஆந்திரா அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
சிலந்தி ஆறு: இதனால் அமராவதி அணைக்கு வரும் நீர் நின்றுவிடும். இதன் காரணமாக அந்த பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைவார்கள். எனவே சிலந்தி ஆற்றின் நடுவே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தடுப்பணை கட்டுவதை தடுக்க திமுக அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அண்டை மாநிலங்கள், தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுப்பதில் குறியாக இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக அரசு: தமிழக அரசு உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை பெற்றுத் தர வேண்டும் தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில், பல்வேறு தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டம் தீட்டினோம். அதில் ஒன்று கட்டப்பட்ட நிலையில், அடுத்து வந்த திமுக அரசு தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்டது. திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை எந்தவித தடுப்பணையும் கட்டப்படவில்லை. மேலும் அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் திட்டமும் கைவிடப்பட்டு உள்ளது.
வாக்காளர்கள் நீக்கம்: தமிழகத்திலும் அதிமுக வாக்காளர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளனர். கோவையில் வாக்காளர்கள் இருமுறை பதிவு என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் வாக்காளர் நீக்கம், வாக்குப்பதிவு சதவிகிதத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் சந்தேகம் நிலவுகிறது. அவ்வப்போது வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. இதுவும் தேர்தல் ஆணையத்தின் மீதான செயல்பாட்டில் சந்தேகமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது. ஆனாலும், தமிழக மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 40 இடங்களில் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்” என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications