ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டாரா? அண்ணாமலையை பங்கமாய் கலாய்த்த எடப்பாடி பழனிசாமி
கோவை: கோவை லோக்சபா தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை தொகுதியில் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன் என்று சவால் விட்டதற்கு பதில் அளித்த, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு ரூபாய் கூட செலவு பண்ணலனா "டீ" கூட குடிக்க முடியாது என்று கிண்டல் செய்துள்ளார்.
கோவை லோக்சபா தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, கோவை தொகுதி வேட்பாளர்கள் யாருடனும் எனக்கு எந்த சண்டையும் கிடையாது. என்னுடைய தேர்தல் பிரசாரத்தில் அவர்களின் பெயர்களை கூட பயன்படுத்தமாட்டேன். எனது சண்டையெல்லாம் அறிவாலயத்துடனும், கோபாலபுரத்தோடும், தமிழகத்தில் ஆதிக்க சக்திகள் வளர்ச்சியை யார் தடுக்கிறார்களோ அவர்கள் மீதுதான்.

கோவை தொகுதியில் எல்லா அமைச்சர்களும் இருப்பார்கள்.. நூற்றுக்கணக்கான கோடிகளை கொண்டு வந்து செலவு செய்வார்கள். ஆனால் அண்ணாமலை ஆகிய நான் சொல்றேன்.. இந்த அண்ணாமலை ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட இந்த அண்ணாமலை கொடுக்க மாட்டான். அடுத்த 40 நாட்கள் பாருங்கள்.. ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கிடையாது.. பாஜக எதுவும் செலவு செய்யாது. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த கோவை தொகுதி தேர்தல் இருக்கும். கடந்த தேர்தலின்போது அறிவித்த அதே அறிக்கையை தி.மு.க. வெளியிட்டுள்ளது. இதில் எதையும் அவர்கள் நிறைவேற்றபோவது இல்லை.
மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்ட வேண்டும் என்று விரும்புகிறேன்.. தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும். நான் பெரிய வேட்பாளர் இல்லை. கோவை மக்களை நம்பி அவர்களுடன் சேர்ந்து 2 ஆண்டுகளில் இந்த மாற்றம் தமிழகத்தில் எடுத்து செல்லும் சாதாரண நபர் அவ்வளவுதான்" இவ்வாறு அண்ணாமலை கூறியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சிலர் இன்று எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஊடகம், பத்திரிக்கை நண்பர்கள் எல்லாம் பிடிங்க.. அவரை பின்னாடியே போய் பாருங்க. ஒரு ரூபாய் செலவு செய்வாரா,.. செய்ய மாட்டாரா என்பதை பாருங்கள்.. ஒரு ரூபாய் கூட செலவு பண்ணாட்டீ டீக்கூடக் குடிக்க முடியாது.. குடிநீர் கூட 12 ரூபாய் ஒரு பாட்டீல், பிஸ்லரி வாட்டர் தான் குடிக்கனும்.. அவங்க பெரிய ஆளுங்க தான் பிஸ்லரி வாட்டர் தான் குடிப்பாங்க.. இதற்கு 12 முதல் 15 ரூபாய் செலவு செய்துதான் ஆக வேண்டும்.
அதெல்லாம் ஒரு பத்திரிக்கை செய்திக்காக சொல்வது.. ஒரு ரூபாய் கூட செலவு செய்ய முடியாது என்று சொல்வது எல்லாம் தவறானது.. அரசியல் கட்சிகள்,அவரவர் நிலைக்கு ஏற்றவாறு செலவு செய்வார்கள். அரசியல் கட்சிகள் எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்திருக்கிறது.. எனவே அண்ணாமலையின் இந்த பேச்சு பத்திரிக்கையில் பரபரப்பான செய்தி வர வேண்டும் என்பதற்காக உள்ளது"இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications