கூட்டணி முடிவு குறித்து அறிவித்த அண்ணாமலை.. ஓபிஎஸ், டிடிவி நிலை என்ன? இதை கவனிச்சீங்களா!
கோயம்புத்தூர்: பாஜக தலைமையை சந்திக்க, அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றுள்ளார். முன்னதாக கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் இணைப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார்.
அண்ணாமலை பேட்டியில் கூறியதாவது, "காங்கிரஸ் இங்கு போகிறது, அங்கு போகிறது, விஜய்யிடம் பேசுகிறார்கள் என்பதை பற்றியெல்லாம் நாங்கள் எதுவும் கவலைப்படவில்லை. ஏனெனில் இந்திய அளவில் காங்கிரஸை மக்களே ஒதுக்க தொடங்கிவிட்டார்கள். பீகார் அதற்கு ஒரு உதாரணம். தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் அவர்களின் நிலைமை பலவீனமடைந்துக்கொண்டே வருகிறது. ஒருவேளை காங்கிரஸ் அதிக சீட் கேட்கிறது எனில், அந்த அளவுக்கு அக்கட்சி வளர்ந்திருக்கிறதா?

காங்கிரஸ் தோல்விக்கு பீகார் கிளாசிக்கான எடுத்துக்காட்டு. 60 இடங்களில் வெறும் 6 தொகுதிகளில் ஜெயித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் 60 இடங்களில் போட்டியிட்டவர்கள் தற்போது வெறும் 25 இடங்களில் சுருங்கியிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் தேர்தல் சீட்டு பேரத்திற்காக விஜய்யிடம் பேசுகிறார்களே தவிர, அவர்கள் வேறு பக்கம் போவார்கள் என்று நினைக்கவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை இன்னும் வர வேண்டியவர்கள் வருவார்கள். தேர்தல் சூடுபிடிக்க இன்னும் 2 மாதங்கள் இருக்கிறது. எனவே, பொறுமையாக காய் நகர்த்தி சென்றால் நிச்சயம் வெற்றி பெறலாம்.
திருப்பரங்குன்றம் விஷயத்தை பொறுத்தவரை, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்காக இந்தியா கூட்டணி எம்பிக்கள் கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் இப்படியான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது எல்லாம் வேறு வழக்குகளில் தீர்ப்பு கொடுத்த நீதிபதிகளுக்கு எதிராகத்தான். ஆனால், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பு திமுகவுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தற்போது இந்தியா கூட்டணி எம்பிக்களிடம் கையெழுத்து வேட்டையை திமுக தொடங்கியுள்ளது. இந்த முயற்சி தோல்வியில்தான் முடியும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications