ஆட்டை பிரியாணி போடுங்க! ஆனா கொடுமைப்படுத்தாதீங்க! அண்ணாமலை பேச்சால் கொள்ளுனு சிரித்த வானதி
கோவை: ஆட்டை பிரியாணி போடுங்கள், என்னையும் வானதி அக்காவையும் ட்ரோல் செய்யுங்கள் எங்களுக்கு நடிக்கவே தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழக பாஜக தலைவர் களமிறக்கப்பட்டுள்ளார். அவர் அந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குள்பட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் பிரதானமாக திமுக, காங்கிரஸை விமர்சித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். சில நேரங்களில் அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளையும் விமர்சிக்கிறார்.
இந்த நிலையில் கோவையில் தெப்பக்குளம் மைதானத்தில் அண்ணாமலை பேசுகையில், திமுகவினருக்கு என்மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள். இன்று தனிமனித தாக்குதல்களில்தான் அரசியல் போய்விட்டது. ஆட்டை பிரியாணி போடுவீங்களோ என்னமோ அந்த ஆட்டை தயவு செய்து கொடுமைப்படுத்தாமல் பிரியாணி போடுங்கள். அதுதான் என் வேண்டுகோள். என்றார். அவர் மேலும் பேசுகையில் கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
திமுகவினர் தமிழக மக்களை வஞ்சித்திருக்கிறார்கள், ஏமாற்றி இருக்கிறார்கள். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டத்தில் காங்கிரஸ் மட்டுமின்றி திமுகவின் சதியும் உள்ளது. இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் பங்கு உண்டு. ஆர்.டி,ஐ கிடைக்க பெற்ற தகவல்களில் தெளிவாக தெரிந்துள்ளது.
ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் திமுகதான். மீனவர்கள் விவகாரம் உள்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் திமுகவே பொறுப்பேற்க வேண்டும், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. கச்சத்தீவு மீட்பு என்ற வாக்குறுதி தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெறும்.
திமுகவின் போலி முகத்திரையை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. கச்சத்தீவு பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. தமிழக மீனவர்கள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒரு பைசா கூட ஆதாயம் கிடையாது. இந்திய இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கோவை வெள்ளக்கிணறு பகுதியில் நேற்று இரவு அண்ணாமலை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரை வரவேற்க நடந்த வள்ளி கும்மி நடனத்தில் கலந்து கொண்டு நடனம் ஆடினார். இதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் மேடி இருக்கும் கட்சியை சேர்ந்த உறுப்பினர் கோவையில் எம்பியாக இருக்க வேண்டும். எனவே நீங்கள் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்.
வள்ளி கும்மிக்கு மிகப் பெரிய பாரம்பரியம் உள்ளது. சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலைதான் இந்த வள்ளி கும்மி. அயோத்தியில் ராமர் கோயில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2024 ஆம் ஆண்டு பிரதமர் ஆட்சிக்கு வந்ததும் வள்ளி கும்மிக்கு உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும் என்றார்.
பொதுவாக அண்ணாமலையை திமுகவினர் ஆட்டுக்குட்டி என விமர்சனம் செய்து வருகிறார்கள். அதிலும் திமுக ஐடி விங்க், தங்கள் ட்வீட்களில் அண்ணாமலை பற்றியதாக இருந்தால் உடனே அவருடைய பெயருக்கு பதிலாக ஆட்டுக்குட்டி எமோஜியை போடுவர். அது போல் கோவை வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட போது திமுகவினர் கோவையில் ஒரு ஆடு சிக்கிடுச்சி , பிரியாணி போட்டுடலாம் என விமர்சித்திருந்தனர். கனிமொழி, டிஆர்பி ராஜா உள்ளிட்டோர் விமர்சனம் செய்தனர். ஆனால் அப்போதெல்லாம் அண்ணாமலை வாய்திறக்காமல் இருந்த நிலையில் தற்போது ஆட்டுக்குட்டி விமர்சனத்தை திமுக பக்கமே திருப்பி போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications