செந்தில் பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம்.. தீவிரமாக காய் நகர்த்தும் விஜய்.. போலீஸ் வேகம்!
சென்னை: திமுகவை சேர்ந்த மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வருகின்றன. தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக கூறி அவரை கைது செய்ய காய்கள் நகர்த்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் தற்போதைய ஆட்சியைக் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக எழுந்த புகாரில், முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே திங்கள் கிழமை வரை சம்மனுக்கு பதில் அளிக்க நேரம் உள்ள நிலையில்.. திடீரென அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் 'லுக் அவுட்' நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் இதில் அதீத வேகம் காட்டி வருகிறது. போலீஸ் காட்டும் வேகத்தை வைத்து பார்க்கும் போது செந்தில் பாலாஜி விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் விஜய்யும் செந்தில் பாலாஜியை கைது செய்வதில் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரூ.25 கோடி பேரம் - வெளியான ஆடியோ
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர், கருத்துக்கணிப்பு நிறுவனம் மற்றும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரும், திருச்சியைச் சேர்ந்த நரேஷ் மற்றும் சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரும் இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க, எம்.எல்.ஏ இளையராஜாவிற்கு ரூ.25 கோடி தருவதாக இவர்கள் பேரம் பேசியுள்ளனர். இது தொடர்பான ஆடியோ பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, எம்.எல்.ஏ இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சென்னை திருவல்லிக்கேணி போலீசார், முதற்கட்டமாக அரும்பாக்கம் திருநாவுக்கரசு மற்றும் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான மேடவாக்கம் தியாகராஜன், பெசன்ட் நகர் கார்த்திக் ஆகிய மூவரைக் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, மணப்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி செல்வன் மற்றும் ஹஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய மேலும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ரூ.40 கோடி சதி அம்பலம் - மாஸ்டர்மைண்ட் செந்தில் பாலாஜி?
கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த விசாரணையில், ஆட்சியை கவிழ்ப்பதற்காக மொத்தம் ரூ.40 கோடி அளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது அம்பலமானது. மேலும், இந்த ஒட்டுமொத்த சதித் திட்டத்திற்கும் பின்னணியில் மாஸ்டர்மைண்டாக செயல்பட்டது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் தான் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்த வழக்கில்தான் செந்தில் பாலாஜியை கைது செய்ய விஜய் திட்டமிட்டுள்ளாராம். இந்த மாதம் விஜய் கரூர் செல்கிறார். அதோடு எம்.ஆர் விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து வெளியேறி கரூர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளார். இதனால் கரூருக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. தன்னுடைய கரூர் பயணம், கரூர் இடைத்தேர்தல் இதற்கு முன்பாக செந்தில் பாலாஜியை கைது செய்ய விஜய் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமாரிடம் விசாரணை நடத்த போலீசார் முற்பட்டபோது, அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் தங்களைத் தேடுவதை அறிந்த இருவரும் தலைமறைவாகிவிட்டதாக திருவல்லிக்கேணி போலீசார் தெரிவித்தனர்.
கரூர் இல்லத்தில் சம்மன் - பெற்றோருக்கு எச்சரிக்கை
தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி கிராமத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக வீட்டிற்கு திருவல்லிக்கேணி போலீசார் சென்றனர். அங்கு செந்தில் பாலாஜியின் தந்தை வேலுச்சாமி மற்றும் தாய் பழனியம்மாள் ஆகியோரிடம் சம்மன் வழங்கப்பட்டது.
அந்த சம்மனில், மறுநாளே சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications