“பெய்லியர் பிளான்.. பூட்டான் கூட நோ சொல்லிடுச்சு! எங்களுக்கு எதுக்கு E20?” வெடிக்கும் போராட்டம்
டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு வெளிநாடுகளை நம்பியிருப்பதை தவிர்க்க.. E20 எனப்படும் எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதற்கு பரவலாக எதிர்ப்பு எழுந்திருக்கிறது. இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசின் இந்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கட்டாயமாகக் கலப்பதுதான் E20 திட்டம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் ஆய்வாளர் தெஹ்சீன் பூனாவாலா மற்றும் 'டீம் பாரத்' அமைப்பினர் இன்று மதியம் 2 மணி அளவில் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டத்தைத் தொடங்குகின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கு E20 எரிபொருளை மட்டுமே கட்டாயப்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக E0 (கலப்பற்ற பெட்ரோல்), E5, E10 மற்றும் E20 ஆகிய எரிபொருள்களில் தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அரசு வழங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் டிமாண்ட் வைத்திருக்கிறார்கள். முன்னதாக இந்தியாவின் E20 பெட்ரோலை பூட்டான் நிராகரித்திருந்தது. அப்படியெனில் ஓட்டை தக்காளியை எல்லாம் எங்கள் தலையில் கட்டுகிறதா மத்திய அரசு என்று போராட்டக்காரர்கள் கொந்தளித்துள்ளனர்.
2023-ஆம் ஆண்டுக்கு முன் தயாரிக்கப்பட்ட பழைய வாகனங்களில் E20 எரிபொருளைப் பயன்படுத்துவதால் இன்ஜின் சேதமடைவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எத்தனால் கலப்பு தொடர்பான ஆய்வறிக்கைகள் மற்றும் ஆவணங்களை அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து மத்திய அரசு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். எத்தனால் கலந்த எரிபொருளால் வாகனங்கள் பாதிக்கப்படும் என்பது வெறும் வதந்தி என்றும், இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பாதுகாப்பான எரிபொருள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி மறுக்கும் பட்சத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று தெஹ்சீன் பூனாவாலா எச்சரித்துள்ளார்.
இந்த எத்தனால் கலப்பு கொள்கை தொடர்பாக அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.














Click it and Unblock the Notifications