அதிமுக அழுத்தத்தால்தான் தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றமா? அண்ணாமலை சொன்ன பதில் என்ன?
கோவை: தமிழக பாஜக தலைவர் மாற்றம் என்பது அதிமுக நிர்பந்தத்தால் நிகழ்கிறதா என்ற கேள்விக்கு அது குறித்து கருத்து சொல்ல முடியாது என அண்ணாமலை தெரிவித்திருந்தார். வரும் ஏப்ரல் 6ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகையின் போது தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகப் போவதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் ஏற்பட போகிறது என கடந்த சில நாட்களாக பேச்சு எழுந்தது.

இந்த நிலையில் கோவையில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அதாவது பாஜகவில் தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடுவதில்லை.
புதிய தலைவர் தேர்வு எப்போது?
தமிழக பாஜக தலைவரை எல்லாரும் இணைந்தே தேர்வு செய்வோம். தமிழக புதிய தலைவருக்கான தேர்தலில் நான் யாரையும் கை காட்டவில்லை. தமிழகத்தை விட்டு நான் எங்கும் செல்லவில்லை. டெல்லிக்கும் நான் செல்ல மாட்டேன்.
சொந்த மண்ணை விட்டு செல்ல மாட்டேன்
என் சொந்த மண்ணை விட்டு செல்ல மாட்டேன். தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கும் என தெரிவித்துள்ளார். அது போல் அதிமுக நிர்பந்தத்தால்தான் தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றமா என நிருபர்கள் கேட்டதற்கு அண்ணாமலை அது குறித்து கருத்து கூறவிரும்பவில்லை என்றார்.
டெல்லிக்கு புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி
கடந்த வாரம் டெல்லிக்கு புறப்பட்டு சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். ரகசியமாக நடந்ததாக சொல்லப்படும் இந்த சந்திப்பில் அதிமுகவுடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
அண்ணாமலை மாற்றப்பட வேண்டும்
அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணி குறித்து பேச முடியும் என எடப்பாடி பழனிசாமி கறாராக சொல்லிவிட்டதாக தெரிகிறது. அதற்கு டெல்லி பாஜக மேலிடமும் பச்சைக் கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பிரஷர்
அதன் எதிரொலிதான் அண்ணாமலை இன்று கோவையில் கொடுத்த பேட்டி என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறார்கள். வரும் 6-ஆம் தேதி ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி வரும் போது அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என தெரிகிறது.
பிரதமர் மோடி
அதே வேளையில் பிரதமர் மோடியை பார்க்க தனித்தனியே எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் நேரம் கேட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், டெல்லி சென்ற நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் மாறுபாடு இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒரு தேர்தலில் கூட வெல்லவில்லை
அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் ஒன்றில் கூட அதிமுக வெல்லவில்லை என்பதால் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி ஏற்பட வேறு ஒரு பொதுச் செயலாளரை நியமிக்கும் பணிகளும் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
அதிமுக- பாஜக உறவில் விரிசல் ஏன்
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா உள்ளிட்டோர் குறித்து அண்ணாமலை அவதூறு கருத்துகளை கூறியிருந்தார். மேலும் அதிமுகவின் கொள்கை தலைவரான அண்ணா குறித்தும் அவர் பல்வேறு விஷயங்களை பேசியதால் இது அதிமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்வலைகள்
இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எல்லாம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு முறை அதிமுக எம்எல்ஏக்களுக்கு ஆண்மை இல்லை என்ற பொருள்படும்படி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இதுவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. எனவேதான் கசப்பான அனுபவங்களுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதால்தான் அண்ணாமலையை மாற்றுமாறு அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார் என சொல்கிறார்கள்.











Click it and Unblock the Notifications