சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் மேலும் ஒருவர் கைது.. கோவையில் நடந்த "ஆபரேஷன்"
கோவை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் கொள்ளை அடிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது ஃபெடரல் வங்கி. இங்கு பெரும்பாலான மக்கள் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்த வங்கியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்கள் வங்கி முன்பு கண்ணீருடன் குவிந்தனர். இந்த வழக்கில் வங்கி ஊழியரே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
சென்னை தனியார் வங்கி கொள்ளையில் 3 பேர் அதிரடி கைது.. 15 கிலோ தங்க நகைகள் பறிமுதல்! பரபர தகவல்
குற்றவாளிகள்
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. நேற்று முன் தினம் பாலாஜி, செந்தில் முருகன், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட வங்கி ஊழியர் ஜிம் முருகன் நேற்று தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
4 பேர் கைது
இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கொள்ளையில் தொடர்புடைய சூர்யா என்பவரை பிடிப்பதற்காக தனிப்படையினர் கோவை சென்றனர். அங்கு விடிய விடிய நடத்திய தேடுதல் வேட்டையில் சூர்யாவை கைது செய்தனர்.
5 பேர் கைது
இதுவரை இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் வேறு யாராவது இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இருக்கிறார்களா என கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளையர்கள் ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் மீது ஏற்கெனவே எந்த வழக்கும் இல்லை. தற்போதுதான் புதிதாக கொள்ளை சம்பவத்தில் அதுவும் சரியாக திட்டமிட்டு நடத்தியுள்ளார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
நம்பிக்கை
மேலும் இந்த கொள்ளையில் முருகனை தவிர வேறு எந்த வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பில்லை என போலீஸார் தெரிவித்துள்ளார்கள். விரைவில் மீதமுள்ள நகைகளும் மீட்கப்படும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.