"அண்ணாமலை ஏழைனு யார் சொன்னா.. அவரே ஒரு பண்ணையார் தான்.." கார்த்திகேய சிவசேனாபதி சரமாரி தாக்கு
கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை என்று சாடிய கார்த்திகேய சிவசேனாபதி, அவர் மீது பல காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.
கோவையில் இந்த முறை லோக்சபா தேர்தலில் கடுமையான போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, பாஜக என அங்கே மும்முனை போட்டி நிலவுகிறது. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்குப் போட்டியிடுவதால் பெரியளவில் கவனம் பெற்றுள்ளது.

இதற்கிடையே கோவை பீளமேடு பகுதியில் பேசிய திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அண்ணாமலை மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.
அங்கே பேசிய அவர், "2021இல் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார். இதன் மூலம் தமிழ்நாடு முழுக்க மக்கள் அச்சம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். போராட்டம் நடத்த வேண்டிய சூழல் கூட யாருக்கும் ஏற்படவில்லை. மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்த கடந்த 10 ஆண்டுகள் முழுக்க தென்னிந்தியா வஞ்சிக்கப்படுகிறது. நமக்குத் தேவையான நிதியைத் தருவதில்லை.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைப் பேசுவதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பாஜகவையும் இங்கு நாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தமிழ்நாடு அரசு தரும் ஒரு ரூபாய்க்கு 29 பைசா தான் திரும்பத் தருகிறார்கள். தமிழ்நாடு மீது மட்டும் ஏன் இந்த வெறுப்பு என்று புரியவில்லை.
இரண்டு தலைமுறைக்கு முன்பு ஆடு, மாடு மேய்த்துக் கொண்டும், கூலித் தொழிலாளிகளாகவும் இருந்த நாம் இன்று மருத்துவர்களாக, உயர் அதிகாரிகளாக, நீதி அரசர்களாக, ஐடி துறையில் வல்லுநர்களாக மாறி இருக்கிறோம் என்றால் அதற்கு சமூக நீதியும் கல்வி பரவலாக்கலாலும் தான் காரணம். கொங்குப் பகுதிக்குத் திராவிட கட்சித் தலைவர்கள் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்துள்ளார்கள்.
1950களில் பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதைக் கண்டறிய கமிஷன் ஒன்றை அமைத்தார்கள். விவசாயம் செய்வோர், விவசாய கூலிகளைப் பிற்படுத்தப்பட்ட சமூகமாக அறிவிக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் இந்த கொங்குப் பகுதியில் இருக்கும் 24 சமூகங்களுக்கு மட்டும் அந்த பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கிடைக்கவே இல்லை. 1974இல் கருணாநிதி முதல்வரா இருந்த போது தான் அந்த 24 சமுதாயங்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் அந்தஸ்து கிடைத்தது. அது இல்லாமல் இந்த பகுதி இந்தளவுக்கு முன்னேறி இருக்காது.
இதற்காகக் கருணாநிதிக்குப் பாராட்டு விழா ஒன்று கோவையில் நடந்தது. அப்போது கூட கருணாநிதி பேசும் போது இது நாங்கள் உங்களுக்கு வழங்கிய சலுகை கிடையாது.. இது உங்களின் உரிமை என்றார். இந்த கொங்குப் பகுதிக்கு திமுக என்ன செய்தது என்பதற்கு இது ஒரு உதாரணம். மேலும், அருந்ததியினரில் சுமார் 18-20% பேர் இங்கு தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வழங்கியதும் திமுக தான். இதன் மூலம் அருந்ததியினர் மக்களிடையே மிகப் பெரிய சமூக மாற்றமும் கல்வியும் எடுத்துச் செல்லப்பட்டது. இப்படி ஒவ்வொரு சமூகத்தின் நலனுக்காக நடவடிக்கை எடுத்த இயக்கம் திமுக.
ஆனால், இப்போது இந்த கொங்குப் பகுதி இளைஞர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாக அண்ணாமலை வந்து இருக்கிறார். படித்து மேலே வந்த உயர் அதிகாரியான அண்ணாமலை, இன்று படிப்பு தேவையில்லை எனப் பேசுகிறார். கல்விக்கும் சமூக நீதிக்கும் இந்த பகுதிக்கும் மிகப் பெரிய எதிரியாக அண்ணாமலை இருக்கிறார். அண்ணாமலை ஒவ்வொரு முறை பேசும் பொது நான் கோட்டாவில் வந்தவன் இல்லை எனச் சொல்கிறார். ஆனால், அவர் சொல்வது பச்சைப் பொய்.. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் படித்து ஐஏஎஸ் அதிகாரியானவர் தான் அண்ணாமலை.
ஆடு மேய்த்த நம்மைப் போன்றவர்களை அதிகாரியாக்கி அழகு பார்த்தது திராவிடம். அதிகாரியை ஆடு மேய்ப்பவராக மாற்றியது ஆரியம். நான் மற்றொரு விஷயத்தை இங்கே சொல்ல வேண்டும். அண்ணாமலை ஏழையான குடும்பத்தைச் சேர்ந்தவர் இல்லை. அவரை பண்ணையார் எனச் சொல்ல வேண்டும்.
மேலும், வரும் லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி நிச்சயம் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும். மோடி ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. பாஜக மனிதக் குல எதிரி எனத் தென்னிந்திய மக்களுக்குத் தெரியும். வந்தவர்களை வாழ வைக்கும் தமிழ்நாடு நிச்சயம் பாஜகவிற்கு வாழ்வு தர மாட்டார்கள். தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் திராவிட கட்சிகளுக்கு ஆதரவாகவே உள்ளது. வெறும் 15 சதவீத வாக்குகள் மட்டுமே திராவிட எதிர்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும் திராவிட கட்சிகளுக்கு ஆபத்து வராது" என்றார்.












Click it and Unblock the Notifications