கோவையில் போலீஸ் என்று பெட்டிக்கடைகளில் பணம் பறித்த பாஜக பிரமுகர்..ஓடினால் விட்ருவோமா.. தரமான சம்பவம்
கோவை: கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், காவலராக ஒரு காலத்தில் இருந்தவர். இப்போது காவல்துறையில் இல்லை.. இவர் பாஜகவில் முக்கிய பிரமுகராக இருந்தவர்.. பாஜக பிரமுகரான இவர், கோவையில் போலீஸ் என கூறி வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 50 வயதாகும் பெருமாள், கோவை மாநகர காவல்துறையில் காவலர் ஆக பணியாற்றி வந்தவர். சூதாட்ட கும்பலுடன் இணைந்து செயல்பட்ட புகாரில், கடந்த 2010-ம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.

அதன்பிறகு பெருமாள் பாஜக கட்சியின் முன்னாள் ராணுவ பிரிவு கோவை மாவட்ட துணைத்தலைவராக இருந்தார். இவர் சஃபாரி உடையுடன் கோவையில் சூலூர், துடியலூர், தடாகம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்றுள்ளார். அங்கு கடைக்காரர்களிடம் ,"நான் போலீஸ் எஸ்.ஐ. நீங்கள் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்கிறீர்கள். எனவே உங்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்துவிடுவேன்." என்று மிரட்டி பணம் பறித்து வந்திருக்கிறாராம்.
அப்படித்தான் கோவை பேரூர் படித்துறை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ஒரு பெட்டிக்கடைக்கு அண்மையில் சென்றாராம். அங்கிருந்த வியாபாரியான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பிரதாப்(26) என்பவரிடம் தன்னை செல்வபுரம் போலீஸ் எஸ்ஐ என்று கூறி அறிமுகம் செய்தாராம்.
அதைத்தொடர்ந்து பிரதாப்பிடம் கடையை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். அதற்கு பெட்டிக்கடைக்காரர் அடையாள அட்டையை காட்ட கூறினாராம். உடனே ஆத்திரம் அடைந்த பெருமாள், அவரின் சட்டை பையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை பறித்தாராம். அத்துடன் அவரை போலீஸ் நிலையம் வா என்று கூறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டாராம்.
இதையடுத்து பெட்டிக்கடைக்காரர் பிரதாப், இதுகுறித்து தனது நண்பர்களிடம் கூறி செல்வபுரம் போலீசில் விசாரித்தபோது, பெருமாள் என்ற பெயரில் எஸ்.ஐ., யாருமில்லை என, தெரிவித்துள்ளனர். இதையடுத்தே பிரதாப்பிற்கு தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
இதற்கிடையில் நேற்று கோவை மாவட்டம் மாதம்பட்டி அருகே பிரதாப்புக்கு தெரிந்த ஹரிஹரன் என்பவரது பெட்டிக்கடையிலும் பெருமாள் பணம் கேட்டு மிரட்டினாராம். இதை அறிந்த பிரதாப் உடனே அங்கு சென்றார். அவரை கண்டதும் பெருமாள் அங்கிருந்து மோட்டர் சைக்கிளில் தப்பி உள்ளார். எனினும் ஹரிஹரன், பிரதாப் ஆகியோர் மற்றொரு இருசக்கர வாகனத்தில் அவரை பின்தொடர்ந்து சென்று தொண்டாமுத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை தொண்டாமுத்தூர் போலீசில் ஒப்படைத்தார்கள். தொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர் போலீஸ் இல்லை என்பதும், போலீஸ் என கூறி பணம் கேட்டு வியாபாரிகளை மிரட்டி வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பெருமாள் மீது 'பாரதிய நியாய சன்ஹிதா' சட்டத்தின்கீழ், பொது ஊழியர் போல ஆள்மாறாட்டம் செய்தல், ஆள்மாறாட்டம் செய்தல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ், தொண்டாமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.வியாபாரிகளிடம் போலீஸ் என்று கூறி பாஜக பிரமுகர் பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications