உங்கள் சுயநலத்துக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்வீர்களா கமல் – வானதி சீனிவாசன் கேள்வி
கோவை: திமுக கூட்டணியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா ஒதுக்கீடு செய்துள்ளனர். இதனை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் கமலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வானதி சீனிவாசன், கமல் தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், அவரின் தொகுதியில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக பொது மக்களுக்கு வீடு, வீடாக சென்று நோட்டீஸ் விநியோகம் செய்தார்.

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறுகையில், மதுரையில் வருகிற 22 ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முருக கோயில்கள் இருக்கும் இடங்களில் அரசு சார்பில் செய்யும் இடையூறுகளை இளைஞர்கள், மக்களிடம் எடுத்து சொல்லி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
இந்த சிறப்புமிக்க மாநாடு முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு மாநாடாக இருக்கும். பக்தர்களின் மன வேதனைக்கு தீர்வு தரும் மாநாடாக இருக்கும். நடிகர் கமல்ஹாசன் இரண்டு தேர்தல்களில் அவருக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து விட்டு ராஜ்யசபா எம்.பி பதவிக்காக திமுகவிடம் சென்று விட்டார்.
சினிமா ஷூட்டிங்கில் கேமரா முன்பு பேசிவிட்டு, பிறகு மறந்து விடுவது போல அரசியல் வாழ்க்கையிலும் வசனங்களாக பேசி அதை மறந்து வருகிறார். எப்படியாவது நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சுய நலத்தோடு தன்னை நம்பிய வாக்காளர்களுக்கு அவர் துரோகம் செய்துள்ளார். மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற முடியாமல், கமல் திமுகவினர் பின்னால் ஒளிந்து கொண்டு இந்த பதவியை பெற்றுள்ளார்.
மதுரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவரது அண்ணன் அழகிரியும் சந்தித்ததை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அண்ணன், தம்பிகள் பிரிவது, சேர்வது எல்லாம் இயல்பு தான். அதே நேரத்தில் மதுரையில் முதலமைச்சர் பார்வையிட சென்றபோது அங்கு துணிகளை போட்டு மூடி வைத்திருந்த சம்பவம் மிகவும் தவறானது.
அதேபோல தான் கோவை மாவட்டத்திலும் பல இடங்களில் குப்பைகளை மறைத்து வைத்து வருகிறார்கள். வட மாநிலங்களில் தீவிரவாதம் மற்றும் மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை மனம் திருந்த செய்கிறார்கள். இதனால் அங்கு தீவிரவாதம் குறைந்துள்ளது. ஆனால் இங்கு அவர்களுக்கு ஆதரவாக முன்னணி அரசியல் தலைவர்களே பேசுவது தவறானது.
மத்திய அரசு கடந்த நான்கு வருடங்களில், தமிழ்நாட்டிற்கு பல ஆயிரம் கோடி மதிப்பில் ஏராளமான திட்டங்களை ஒதுக்கியுள்ளது. இந்த தகவல்களை பிரதமர் நரேந்திர மோடியே ராமேஸ்வரம் கூட்டத்தில் பேசியுள்ளார். எனவே இதைப் பற்றி குறை கூறுபவர்களை ஒன்றும் சொல்ல முடியாது." என்று கூறினார்.












Click it and Unblock the Notifications