2026லும் நிச்சயம் திமுக ஆட்சிதான்.. கோவை மக்கள் வரவேற்பை பார்த்தாலே தெரிகிறது.. முதல்வர் ஸ்டாலின்
கோவை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்திற்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். இதற்கிடையே கோவை திமுக நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். 2026ல் மீண்டும் திமுக ஆட்சி தான் என்பதை உறுதி செய்யும் விதமாக மக்கள் வரவேற்பு இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தொடர்ச்சியாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்தித்து வருகிறார். அதன்படி இப்போது அவர் கோவை மாவட்டத்திற்கு வந்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை கோவை வந்த முதல்வர் ஸ்டாலின், கோவை விளாங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள டைடல் பார்க் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தைத் திறந்து வைத்தார். அதன் பிறகு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு போத்தனூர் பகுதியில் அமைந்துள்ள பிவிஜி அரங்கில் நடந்த ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிலும் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்தவுடன் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றை அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும். கோவையில் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர். 2026ல் நடக்கும் சட்டசபைத் தேர்தலிலும் திமுகவே வென்று ஆட்சியை அமைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மக்களின் வரவேற்பு இருந்தது. மக்கள் வரவேற்பின் மூலம் மீண்டும் திமுகதான் ஆட்சிக்கு வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்" என்றார்.

தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின், "தங்க நகை தொழில் பூங்கா கோரிக்கை வைத்தனர். அது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும்" என்றார்.
அப்போது கோவையில் கட்சி ரீதியாக மாவட்டம் விரிவுபடுத்தத் திட்டம் இருக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், "கட்சி ரீதியாக முடிவு எடுக்கும் விஷயங்கள் குறித்து வெளியே சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications