பறந்த பிடிவாரண்ட்.. அவசர அவசரமாக ஆஜரான பாஜக ஏபி முருகானந்தம்.. கோவை நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
கோவை: வரதட்சணை விவகாரத்தில் ஆஜராகாமல் இருந்த பாஜக பொதுச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அவருடைய தந்தைக்கு கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. இதையடுத்து அவசர அவசரமாக முருகானந்தம் நேரில் ஆஜராகி பிடியாணையை ரத்து செய்ய கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாஜக தமிழ்நாடு பொதுச் செயலாளராக செயல்பட்டு வருபவர் ஏ.பி.முருகானந்தம். இவருக்கும் கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த சாவடிபுதூரைச் சேர்ந்த சுந்தரசாமியின் மகள் ஞான சவுந்தரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே ஞான சவுந்தரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வரதட்சணை கொடுமையால் தான் ஞான சவுந்தரி தற்கொலை செய்து கொண்டதாக ஏபி முருகானந்தத்தின் மீது புகார் எழுந்தது. மகள் உயிரிழப்பைத் தொடர்ந்து திருமணத்தின்போது ஏபி முருகானந்தத்திற்கு சுந்தரசாமி வரதட்சணையாக கொடுத்த தங்க நகைகள், நிலம், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் திரும்ப வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக சுந்தரசாமி சார்பில் ஏபி முருகானந்தம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏபி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சார்பில் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், பாஜக பொதுச் செயலாளர் ஏபி முருகானந்தம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையிலும் ஏபி முருகானந்தம் மற்றும் அவரது தந்தை ஆஜராகாமல் இருந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை நவம்பர் 27 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்நிலையில், கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் பா.ஜ.க. பொதுச் செயலாளர் முருகானந்தம் நேரில் ஆஜராகி பிடியாணையை ரத்து செய்ய இன்று மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிடியாணையை ரத்து செய்தது.
இதுதொடர்பாக பா.ஜ.க. பொது செயலாளர் முருகானந்தம் கூறுகையில், பத்திரிகைகளில் வெளியான செய்திகள் புனையப்பட்டவை. தனிநபர் ஒருவர் என் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கபட்டது. அதை ரத்து செய்யக் கோரி இன்று நீதிமன்றம் வந்தேன். நீதிமன்றம் பிடியாணையை ரத்து செய்து இருக்கின்றது என்றார்.











Click it and Unblock the Notifications