கோவை + திருப்பூர் மாவட்ட மக்களுக்கு புதிய எச்சரிக்கை.. தீபாவளி வேற நெருங்குதே.. என்ன விஷயம் பாருங்க
கோவை: தீபாவளி நெருங்கும் நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு அணைகளும் நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. அதிலும் கோவை மாவட்டத்தில் உள்ள சில அணைகள் ஏற்கனவே நிரம்பிவிட்ட நிலையில், அருகே உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாக மேற்கு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

கோவை கனமழை: கோவையில் பெய்து வரும் கனமழையால் இந்த கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் அளவு அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது. நீர்நிலைகள் நிரம்பும்போது அது ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உரிய நேரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடவும் நிவாரண முகாம்களை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் தயாராகி வருகிறது.
நிரம்பும் அணைகள்: கோவையைப் பொறுத்தவரை சோலையார் அணையின் மொத்த கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அங்கிருந்து நொடிக்கு 983 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதேநேரம் அணைக்கு இப்போது நீர்வரத்து 705 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.. அந்த அணையில் அதிகபட்சம் 160 அடி வரை நீரைச் சேமித்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அது முழு கொள்ளளவை எட்டிவிட்டது.

அதேபோல் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து 1,556 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 1,975 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.. அங்கு இப்போது நீர்மட்டம் தற்போது 71.54 அடியாக உள்ளது. அணையின் அதிகபட்ச கொள்ளளவு 72 அடியாகும்.
ஆழியாறு அணையைப் பொறுத்தவரை அதன் மொத்த கொள்ளளவு 90 அடியாக உள்ள நிலையில், அங்கு நீரின் அளவு 86.5 அடியாக உள்ளது. நீர் வரத்து நீர்வரத்து 595 கன அடியாக உள்ள நிலையில், நொடிக்கு 508 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
திருப்பூர் அணைகள்: திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை கொள்ளளவு 60 அடியாக உள்ள நிலையில், அங்கு நீர் மட்டம் 54.63 அடியாக உள்ளது. நீர்வரத்து 667 கன அடியும், நீர் வெளியேற்றம் 573 கன அடியும் உள்ளது. அதேபோல அமராவதி அணைக்கு நீர்வரத்து 712 கன அடியும், நீர் வெளியேற்றம் 308 அடியாகவும் உள்ளது. நீரின் முழு கொள்ளளவு 90 அடியாக உள்ள நிலையில், இப்போது நீர் மட்டம் 86.5 அடியாக உள்ளது.
எச்சரிக்கை: ஏற்கனவே நீரின் அளவு அதிகமாக உள்ள நிலையில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள ஒரு நகராட்சி, 2 பேரூராட்சிகள் உள்ளிட்ட உட்பட 71 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என அஞ்சப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications