கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் போக பிளானா.. செப்.1ல் முக்கிய மாற்றம்
கோவை: கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12680) வருகிற செப்டம்பர் 1-ந் தேதி கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலுக்கு பதில் காட்பாடியில் இருந்து புறப்படும் என ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சென்னை கோவை இடையே தினசரி கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இரு மார்க்கமாக செல்கிறது. கோவையில் இருந்து காலை 6.20க்கு மணிக்கு தினமும் புறப்பட்டு, திருப்பூர், ஈரோடு, சேலம், பொம்மிடி, மொரப்பூர், சாம்பல்பட்டி, ஜோலார்பேட்டை, ஆம்பூர், காட்பாடி, அரக்கோணம், வழியாக சென்னைக்கு பிற்பகல் 1.50க்கு சென்றுவிடும்.

அதேபோல் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து தினமும் பிற்பகல் 2.35க்கு புறப்படும் ரயில், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, சாம்பல்பட்டி, மொரப்பூர், பொம்மிடி, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்து இரவு 10.20க்கு கோவைக்கு செல்லும். இந்த ரயில் முழுக்க முழுக்க உட்கார்ந்து செல்லும் இருக்கைகள் கொண்ட ரயில் என்பதால், அன்றாடம் பயணிக்கும் பலர், இந்த ரயிலை வெகுவாக விரும்புகிறார்கள். இந்த ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக காட்பாடி வரை மட்டுமே செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அரக்கோணம் ரெயில்வே யார்டு பகுதியில் ரெயில் போக்குவரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், பாயிண்ட்ஸ் மற்றும் கிராசிங்கை மாற்றியமைக்கும் பொறியியல் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வருகிற 1-ந் தேதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12680) வருகிற 1-ந் தேதி கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் காட்பாடி- சென்னை சென்டிரல் இடையே இயங்காது.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-12679) வருகிற 1-ந் தேதி சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் காட்பாடியில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு கோவை வரை இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications