அஜித்தை பாரு! அத விட்டுட்டு ரோட்ல சாகசம் காட்டி கேஸ் வாங்கிட்டு வராதே! கோவை போலீஸ் கலகல வார்னிங்!
கோவை: துபாயில் நடந்த 24 எச் கார் பந்தய போட்டியில் நடிகர் அஜித்குமாரின் அணி 3ஆவது இடத்தை பிடித்து தமிழகத்திற்கே பெரும் பெயரை பெற்று தந்தது. இதனால் துபாயில் இந்திய கொடி பெருமிதத்துடன் பறந்தது.
அஜித்குமார் கார் ரேஸிங்கில் 3வது இடத்தை பிடித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பாராட்டி வருகிறார்கள்.

ரேஸிங்கில் வென்றதும் அஜித் , தேசியக் கொடியை எடுத்துக் கொண்டு உற்சாகமாக வலம் வந்தார். இது ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பெருமையான தருணம். இந்த ரேஸிங்கில் எல்லா கேமராக்களும் அஜித்தையே பார்ப்பதால் முதல் பரிசு வாங்கியவர்கள் கூட "என்னது இது! முதல் பரிசு வாங்கியிருக்கும் நம்மை ஒருத்தரும் கண்டுக்கலை! ஆனால் 3 ஆவது பரிசு வாங்கிய அஜித்தை அனைத்து கேமராக்களும் ரவுண்ட் கட்டுகின்றனவே" என குழம்பினார்கள். இப்படியொரு பெருமை இந்தியர்களும் தமிழர்களுக்கும் வெளிநாட்டில் கிடைத்துள்ளது.
பொதுவாக ரேஸிங் என்பது தங்களுக்கும் சரி, அடுத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆளில்லாத இடங்களில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் உரிய பயிற்சியுடன் செய்யப்பட வேண்டியது.
ஆனால் இன்று சிலர் சாகசம் என்ற பெயரில் பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையிலேயே செய்து விபத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனால் அப்பாவி பொதுமக்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழப்பதுடன் சில நேரங்களில் உயிர்களையும் இழக்கிறார்கள்.
வீலிங் எனும் சாகசத்தை பல இளைஞர்கள் செய்கிறார்கள். குறிப்பாக புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட விழாக்களின் போது இந்த சாகசங்களை அவர்கள் செய்து வருகிறார்கள். இவ்வாறு செய்யும் நபர்களை போலீஸார் எச்சரித்து அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்கிறார்கள். ஆனாலும் புற்றில் இருந்து ஈசல் கிளம்புவதை போல் ஒருவர் மாற்றி ஒருவர் என அடுத்தடுத்து சாகசம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள்.
இவர்களை எச்சரிக்கும் விதமாக சாகசம் என்றால் என்ன என்பதற்கான அர்த்தத்தை இளைஞர்களுக்கு காமெடி வழியாக கோவை மாநகர போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அது ஒரு பாதியில் அஜித்தின் சாகசத்தை போட்ட போலீஸார் மீதி பாதியில் திறமை இருந்தால் அவர (அஜித்) மாதிரி களத்துல போய் ஜெயிச்சு முன்னேற பாரு!
அதவிட்டுட்டு ரோட்ல சாகசத்த காட்டுறேன்னு கேஸை வாங்கிட்டு கிடக்காதே! என செவன்ஜி ரெயின்போ காலனியில், ஊதாரித்தனமாக சுற்றும் ஹீரோ ரவி கிருஷ்ணாவை அவரது அப்பா ரோலில் நடித்த விஜயன் அறிவுரை கூறும்படியான படத்தை வைத்துவிட்டு போலீஸார் எச்சரிக்கை விடுப்பது போல் உள்ளது.












Click it and Unblock the Notifications