கோவையை மிரட்டும் டெங்கு!! 6 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு.. 37 டெங்கு ஹாட்ஸ்பாட்கள்
கோவை: தமிழ்நாட்டில் ஒருபுறம் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் டெங்கு பாதிப்பும் தலைவலியாக மாறியுள்ளது.
உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவை கட்டுப்படுத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. கடந்த சில மாதங்களாக வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வந்தது.
வேக்சின் பணிகளால் தான் கொரோனாவால் ஏற்படும் தீவிர பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது உலகின் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன.

டெங்கு பரவல்
இந்நிலையில், இந்தக் குளிர் காலத்தில் நமக்கு மற்றொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது டெங்கு பாதிப்பு. டெங்கு காய்ச்சல் ஏடீஸ் வகை கொசுக்களினாலேயே பரவுகிறது. பொது இடங்களிலும், வீடுகளிலும் நீர் தேங்கி இருந்தால், அதில் இந்த கொசுக்கள் மிக எளிதாக இனப்பெருக்கம் செய்யும். இதனால் டெங்கு பாதிப்பு வேகமாகப் பரவும். இதனால் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் கொசுக்கள் எளிதாக உற்பத்தியாக ஏதுவாக மழை நீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்யத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

29 பேருக்கு டெங்கு
இதனால் பெரும்பாலான பகுதிகளில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள்ளேயே இருக்கிறது. இருப்பினும், கோவை மாவட்டத்தில் இந்த மாதம் டெங்கு பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் 14 சிறுவர்கள் 19 பெரியவர்கள் என மொத்தம் 37 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 29 பேர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியுள்ளது மாநகராட்சி.

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
அதன்படி கோவை மாவட்டத்தில் டெங்கு பரிசோதனை மும்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த நவ. மாதம் முதல் மட்டும் 1.90 லட்சம் பேருக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் மொத்தம் 37 இடங்கள் டெங்கு ஹாட்ஸ்பாட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அங்கு டெங்கு ஒழிப்பு பணிகளில் மொத்தம் 2000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கோவை ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.

அறிகுறிகள்
ஏடிஸ் கொசுக்கள் மூலமாகவே டெங்கு பரவும் நிலையில் தங்களைச் சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தோலில் ரேஷ் ஏற்பட்டாலும், பல் துலக்கும் போது ரத்தம் வந்தாலும் உடனடியாக டெங்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்குவால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து உயிரிழப்பு
கோவை மாவட்டத்தில் 2 போர் டெங்குவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பழையங்காடு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, கோவை அன்னூரை சேர்ந்த கணேசன் (38) என இருவர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். அதேபோல கோவை அன்னூரை சேர்ந்த 7 மாத பெண் குழந்தை நிமோனியா காய்ச்சல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.












Click it and Unblock the Notifications