குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.. பல வருடங்களாக தவறவிட்டவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.. கோவை மாநகராட்சி
கோவை: தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவு விதிகள் 2000-ன்படி 2009-ம் வருடம் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 26.09.2026 முடிய நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் குழந்தையின் பெயர் பதிவு செய்து குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெறலாம் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பிறப்புச் சான்றிதழ் வாங்கும்போது பெயர் இல்லாமல் "ஆண் குழந்தை" அல்லது "பெண் குழந்தை" என்று மட்டுமே பதிவு செய்திருப்பார்கள். விதிகளின்படி, பிறப்புப் பதிவு செய்த 12 மாதங்களுக்குள் அல்லது அபராதத்துடன் 15 ஆண்டுகளுக்குள் பெயரைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். அந்த 15 ஆண்டு காலக்கெடு பலருக்கு முடிவடைந்த நிலையில், தற்போது அரசு அதை நீட்டித்திருக்கிறது.

2009-ம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள், இதுவரை பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்காமல் இருந்தால் இப்போது சேர்த்துக்கொள்ள முடியும். அதேநேரம் பிறப்பு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தப் பதிவில் பெயர் மட்டும் இல்லாமல் இருந்தால், இப்போது பெயரை இணைக்க முடியும்.
நகராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேவையான ஆவணங்கள் என்று பார்த்தால், உங்கள் குழந்தையின் பெயர் இல்லாத பழைய பிறப்புச் சான்றிதழ் நகல், குழந்தையின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (TC) அல்லது மதிப்பெண் பட்டியல் மற்றும் குழந்தையின் ஆதார் அட்டை நகல் அத்துடன் பெற்றோரின் அடையாளச் சான்றுகள் தேவைப்படும். இந்த சேவையை பெற காலதாமதக் கட்டணமாக ரூபாய் 200 செலுத்த வேண்டியிருக்கும்.
பாஸ்போர்ட் எடுப்பதற்கும், உயர்கல்விச் சேர்க்கைக்கும், வெளிநாடு செல்வதற்கும் பிறப்புச் சான்றிதழில் பெயர் சரியாக இருப்பது கட்டாயம். பலருக்கு இப்போதுதான் இதன் அவசியம் புரிகிறது. பலர் இப்போது பிறப்பு சான்றிதழில் பெயர் போட்டு வாங்கி வருகிறார்கள். அவர்களுக்காகவே அரசு இந்த சேவையை அளித்துள்ளது.
கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்பு புதுப்பிக்கப்பட்ட பதிவு விதிகள் 2000-ன்படி 2009-ம் வருடம் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பிறந்த குழந்தையின் பிறப்பு சான்று பதிவில் குழந்தையின் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 26.09.2026 முடிய நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, குழந்தையின் பெயர் பதிவு செய்து குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு சென்று குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி கொண்ட ஏதேனும் ஒரு ஆவண நகலுடன் (School Mark Sheet or School TC or School Bonofide Letter or Etc.) உரிய பெயர் புதிவு காலதாமத கட்டணம் ரூபாய் 200/- செலுத்தியும், விண்ணப்பத்தில் விண்ணப்பித்து குழந்தை பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications