கோவை ஷாக்.. பிரபல ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்த நாய்.. 2வது மாடியில் இருந்து தூக்கி வீசிய ஊழியர்கள்
கோவை: கோவை சரவணம்பட்டியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று நுழைந்துள்ளது. அதை விரட்டி பிடித்த ஊழியர்கள், நாயை இரண்டாவது மாடி ஜன்னல் வழியாக கீழே வீசியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நாய்கள் மனிதர்களை கடிப்பது, விபத்துகளை ஏற்படுத்துவது என்று பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன. மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கோவை சத்தி சாலை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் ஷாப்பிங் மால் இயங்கி வருகிறது. எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் இந்த வளாகத்தில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10 மணியளவில் அந்த ஷாப்பிங் மாலுக்குள் ஒரு நாய் நுழைந்துள்ளது. தொடர்ந்து அது ஷாப்பிங் மாலின் இரண்டாவது மாடிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கிருந்த ஊழியர்கள் நாயை பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அந்த நாயை பிடித்து, இரண்டாவது மாடியின் ஜன்னலில் இருந்து தூக்கி கீழே வீசியுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது விலங்குகள் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த நாயை மீட்டு தனியார் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்தனர். படுகாயமடைந்த நாயின் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அந்த நாய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக விலங்குகள் நல ஆர்வலர் கௌதம் சீனிவாசன் என்பவர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கெளதம் கூறுகையில், " வாயில்லா ஜீவனை இரண்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசுயிருப்பது ஆணவத்தின் உச்சம்.
இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நாயின் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications