ஜிடி நாயுடு மேம்பாலத்தை கதிகலங்க வைத்த போதை ஆசாமி.. கொதித்த கோவை மக்கள்
கோவை: அவிநாசி சாலை ஜி.டி. நாயுடு மேம்பாலம், கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவே மாறியுள்ளது. தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம் என்று பெயர் பெற்றது. இதனால் போக்குவரத்து குறைந்ததோ இல்லையோ தினசரி ஏதாவது ஒரு சர்ச்சை அரங்கேறி கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு அந்த மேம்பாலத்தில் ஒரு போதை ஆசாமி இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தபடி சென்றுள்ளார். மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அந்த நபர் சென்றதால் மக்கள் அவரை எச்சரித்தனர். அப்படியும் திருந்தாமல் அந்த நபர் சேட்டை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து வேகமாக வளர்ந்து வருகிறது கோவை மாவட்டம். ஆனால் போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. இதை சரி செய்யும் விதமாக பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கோவையின் முக்கிய பகுதியான அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

அவிநாசி சாலை மேம்பாலம்
அதை சரி செய்யும் விதமாக அவிநாசி சாலையின் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கடந்த 2025 நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலமான இதற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனாலும் சிலர் அந்த மேம்பாலத்தில் அதிவேகமாக வாகனங்களை இயக்கி வருகிறார்கள்.
ஜிடி மேம்பாலத்தில் விபத்துகளை தவிர்ப்பதற்காக காவல் துறையினர் அதிநவீன வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் இரவு நேரத்திலும் துல்லியமாகப் படம் பிடிக்கும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தித் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். நள்ளிரவு நேரங்களில் சில சமயம் போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. அப்படி இருந்தும் சிலர் அட்டகாசம் செய்கிறார்கள்.

குடிமகன் அட்டகாசம்
இந்நிலையில் நேற்று இரவு ஒரு போதை ஆசாமி தன் இரு சக்கர வாகனத்தில் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்றுள்ளார். ஸ்டன்ட் செய்கிறேன் என்கிற பெயரில் தனது இரு சக்கர வாகனத்தை அங்கும், இங்கும் தாறுமாறாக இயக்கியுள்ளார். திடீரென இருக்கையில் இருந்து எழுந்து நின்று கொண்டும், வாகனத்தை வளைத்து சாகசம் செய்து உள்ளார். சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அந்த நபர் சென்றுள்ளார்.

சில வாகன ஓட்டுகள் அவரால் நிலைதடுமாறிப் போயினர். அந்த வழியாக காரில் சென்ற சிலர், அந்த நபரை எச்சரித்துள்ளனர். அதை பொருட்படுத்தாமல் அந்த நபர் தொடர்ந்து சாகசம் செய்துள்ளார். இதனை ஒரு வாகன ஓட்டி செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். போதை ஆசாமி அபாயமாக வாகனம் ஓட்டும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.













Click it and Unblock the Notifications