குடும்ப அட்டையில் முகவரி மாற்றம் செய்ய அதிகாரிகள் மறுப்பு.. சிறப்பு முகாம்களில் என்ன நடக்கிறது?
கோவை: குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் மாதம் ஒருமுறை நடைபெறும் சிறப்பு குறைதீர் முகாம்களில் ரேஷன் கார்டுகளில் மாற்றம் செய்ய வரும் மக்கள், தங்கள் முகவரியை மாற்றக் கோரும் போது அதிகாரிகள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவையில் சிலருக்கு சிறப்பு முகாம்களில் முகவரியை மாற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பொது வினியோக திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று தமிழ்நாடு முழுக்க நடந்தது. குடிமைப்பொருள் தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைஇந்த முகாம் நடந்தது.கோவை மாவட்டத்திலும் குடிமைப்பொருள் தாசில்தார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடந்தது.

புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நகலட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு, மாற்றம், அங்கீகார சான்று, தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் மற்றும் இதர குறைகள் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் நேரடியாக முகாம் அலுவலரிடம் வழங்கி தீர்வுகள் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த சிறப்பு முகாம்களில் முகவரி மாற்ற விண்ணப்பித்தினை மட்டும் அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டதாக புகார்கள் எழுந்தள்ளது. இதுகுறித்து புலியகுளத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், ""பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளைப் பெறுவதற்காக, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று, மாவட்டந்தோறும் உள்ள தாலுகா வழங்கல் அலுவலகங்களில் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுவது வழக்கம். இந்த முகாமில், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், டூப்ளிகேட் ரேஷன் கார்டுகள், அலைபேசி எண் மாற்றம், குடும்பத் தலைவரின் புகைப்படம் மாற்றம் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க முடியும்.ஆனால் இந்த முகாம்களில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு முகவரி மாற்றம் செய்வதை அதிகாரிகள் ஏற்கவில்லை.
"கோயம்புத்தூரில் இருந்து எனது மனைவி மற்றும் மகன் வசிக்கும் தஞ்சாவூருக்கு எனது குடும்ப அட்டையை முகவரியை மாற்றக் கோரி முகாமுக்குச் சென்றேன். ஆனால் மாற்றங்களைச் செய்ய முகாம் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். தஞ்சாவூர் சென்று அங்கு மனு அளிக்குமாறு கூறிவிட்டனர் என்றார். இப்போது, அனைத்து செயல்முறைகளும் ஆன்லைன் சேவைகளின் கீழ் செய்யப்படுவதால். சிறப்பு முகாம்கள் குடும்ப அட்டைதாரரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை என்று கூறினார்.
இதனிடையே கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகத்திற்குச் சென்ற இன்னொரு குடும்ப அட்டைதாரரின் முகவரி மாற்ற கோரிக்கையையும் அதிகாரிகள் ஏற்கவில்லை. மாறுதல் செய்ய வேண்டும் என்றால். மதுரையில் உள்ள சொந்த ஊரில் சென்று மனு அளிக்குமாறு கூறினார்கள் என்று கூறினார்.
இந்த முகவரி மாற்ற பிரச்சனைகள் குறித்து பதில் அளித்த கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா கூறும் போது, "ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு முகவரி மாற்றம் செய்வது குறித்து, விண்ணப்பதாரர்கள் அளித்த முகவரியை ஆய்வு செய்வது கடினமாக உள்ளது. இதனால், அதிகாரிகள் சில நேரங்களில் இந்த முகவரி மாற்ற கோரிக்கையை நிராகரித்து வருகின்றனர். இருப்பினும், விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட தாலுகாவுக்குச் சென்று விண்ணப்பிக்க முடியும்" என்றார்.











Click it and Unblock the Notifications