சார்ஜ் போட்ட படியே செல்போன் பேசிய கோவை முதியவர் – திடீரென வெடித்து சிதறிய சம்பவம்
கோவை: மக்கள் செல்போன் பயன்படுத்தாத இடமே இல்லை. செல்போன் சார்ஜில் போட்டபடியே பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. அந்த வகையில் கோவையில் முதியவர் ஒருவர் செல்போனில் சார்ஜ் போட்டபடியே பேசியதில், அது வெடித்து காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதுமே செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. முன்பு போன் இருப்பவர்களை ஆச்சர்யமாக பார்த்த காலம் மாறி, இப்போது போன் இல்லாதவர்களை ஆச்சர்யமாக பார்க்கும் காலம் வந்துவிட்டது. அந்தளவுக்கு தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டது.

டிஜிட்டல் யுகத்தில் செல்போன்களின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. முன்பு ஊருக்கு ஒரு லேண்ட்லைன் கனெக்ஷன் இருந்தாலே அதிசயமாக இருந்தது. தற்போது வீட்டில் உள்ள அனைவரிடமும் ஒரு செல்போன் உள்ளது. சில நபர்கள் தங்கள் பணிகளை பொறுத்து இரண்டு செல்போன்களை கூட பயன்படுத்துகிறார்கள்.
பணி, தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என்று பலரும் பல காரணங்களுக்காக செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். பயன்பாடுகள் அதிகம் இருக்கும் அதே நேரத்தில் ஆபத்துகளும் இருக்கதான் செய்கிறது. செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் பிரச்னை தொடங்கி குழந்தைகள் யாருடனும் பேசாமல் இருப்பது வரை ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
அதிலும் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசுவதால் கடந்த காலங்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு விழிப்புணர்வு மேற்கொண்டாலும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கோவை மாநகர் போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 64). இவர் தன்னுடைய செல்போனை நேற்று இரவு சார்ஜ் போட்டுள்ளார்.
அப்போது ராமச்சந்திரனுக்கு செல்போனில் அழைப்பு வந்துள்ளது. ராமச்சந்திரன் செல்போனை சார்ஜில் இருந்து ஆஃப் செய்யாமலேயே எடுத்து பேசியுள்ளார். அவர் போன் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்துவிட்டது. இதில் ராமச்சந்திரனுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர் உடனடியாக ராமச்சந்திரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்த போத்தனூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ராமச்சந்திரன் செல்போனை சார்ஜ் போட்டபடியே நீண்ட நேரம் பேசியதால் அது சூடாகி வெடித்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ராமச்சந்திரன் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications