குதூகல குஷியில் கோவை! முழு கொள்ளளவை எட்டப்போகும் சிறுவாணி! இந்த வருசம் தண்ணி பிரச்சனையே இருக்காது!
கோவை: கோவை மக்களின் முக்கியமான நீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் கோவை மக்கள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்டத்தில் கடந்த 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்டது சிறுவாணி அணை. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இந்த அணை கேரள மாநிலத்தின் வசம் சென்றது. சிறுவாணி அணை, தற்போது கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது. கேரள அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது சிறுவாணி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.

சிறுவாணி தண்ணீரின் சுவை பெரும் புகழ் பெற்றது. உலகின் இரண்டாவது சுவையான குடிநீர் என்ற பெயர் பெற்றது சிறுவாணி தண்ணீர். கோவை, தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாநகரகமாக உருவெடுத்திருப்பதற்கு முக்கியமான காரணம் சிறுவாணி தண்ணீர்தான். சிறுவாணி தண்ணீருக்காகவே, கோவை மணமகனுக்கு பெண் கொடுத்த கொங்கு மண்டலத்தவர்கள் ஏராளம்.
கோவையின் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் தமிழக எல்லையில் சாடிவயல் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, கோவை மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. மேலும், கோவைக்குச் செல்லும் வழியில் கிராமப் பகுதிகளுக்கும் சிறுவாணி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் சிறுவாணி அணையில் எதிர்பார்த்த அளவுக்கு நீர் இருப்பு இல்லை. இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். கடந்த ஆண்டு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய அளவுக்கு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இதன் காரணமாக அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டது. தினமும் நான்கு கோடி லிட்டர் தண்ணீர் தான் எடுக்கப்பட்டது. இதனால், கோவை மக்களுக்கு சிறுவாணி தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழையை எதிர்பார்த்து கோவை மக்கள் அனைவரும் காத்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுவாணி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு வேகமாக அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்திற்குள்ளாகவே 27.5 அடி உயர்ந்துள்ளது. நேற்று பொழிந்த மழை காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் என்பது 3 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35.35 அடியாக இருந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 38.67 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று சிறுவாணி அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்த நிலையில் இன்று 3 அடி உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து கொண்டே வருகிறது. வரையறுக்கப்பட்ட 45 அடி கொள்ளளவை அடுத்த வாரத்திற்குள் சிறுவாணி அணை எட்டக்கூடும் எனத் தெரிகிறது. இதனால் அடுத்த சில மாதங்களுக்கு கோவை மாவட்டத்துக்கு குடிநீர் எடுத்துக்கொள்ளலாம். எனவே, இந்த ஆண்டு கோவைக்கு சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு வராது என எதிர்பார்க்கப்படுகிறது. இது கோவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications