பாலியல் வழக்கில் கோவை மாணவி தற்கொலை வழக்கு.. கைதான ஆசிரியர் மிதுனின் மனைவியும் போக்சோவில் கைது
கோவை: கோவையில் பாலியல் வழக்கில் கைதான இயற்பியல் ஆசிரியர் மிதுனின் மனைவி அர்ச்சனா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 மாணவி ஒருவர் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (35), பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறினார்.

ஆனாலும் பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் பேருந்தில் செல்லும் போது யாராவது இடித்துவிட்டால் என்ன செய்வாய். அது போல் இதையும் நினைத்துக் கொள் என துளியும் பொறுப்பற்ற வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனியாக அந்த மாணவியை வகுப்பறைக்கு வரவழைத்து மேலாடைகளை கழற்ற சொல்வது உள்ளிட்ட செயல்களில் மிதுன் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் மிதுனின் பாலியல் தொல்லை தொடர்ந்த நிலையில் அவரது வீட்டருக்கே பழகிய மனோராஜ், முகமது சுல்தான் ஆகிய இரு இளைஞர்களும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் அந்த சிறுமி கடிதம் எழுதி வைத்துவிட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த விவகாரம் பெரிதானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன், மனோராஜ், முகமது சுல்தான், மிதுன் சக்ரவர்த்தி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில்தான் ஆசிரியர் சக்கரவர்த்தியின் மனைவி அர்ச்சனா (32) நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த போது அர்ச்சனா அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.
அப்போது மிதுன் சக்ரவர்த்தி பாலியல் தொல்லை கொடுப்பதாக அர்ச்சனாவிடம் மாணவி புகார் அளித்தும் அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் மாணவி மனமுடைந்து தனக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை என்ற விரக்தியால் தற்கொலை எனும் தவறான முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். எனவே மாணவி தற்கொலைக்கு அர்ச்சனாவும் காரணம் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மேற்கு பகுதி மகளிர் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் மிதுனின் பாலியல் தொல்லை குறித்து அர்ச்சனாவுக்கு தெரிந்திருந்தும் விசாரணையின் போது கூட அதை தெரிவிக்கவில்லை என போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்ட போது ஒரு கடிதத்தையும் எழுதியிருந்தார். அதில் யாரையும் சும்மா விடக் கூடாது என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவியிடம் நேரில் தொல்லை கொடுத்தது இல்லாமல் வாட்ஸ் ஆப் மெசேஜ், வீடியோ காலிலும் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications