கோவை தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு.. சுற்றி வளைத்து நகையை பறித்த மர்ம நபர்கள்
கோவை: காவல்துறையினருக்கு இது மோசமான காலம். சிவகங்கை திருப்புவனம் இளைஞர் கஸ்டடி மரணத்தையடுத்து, காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மனைவியுடன் பயணித்த தலைமை காவலர் மீது அரிவாள் வெட்டு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அஜித் குமார் என்ற இளைஞரை, காவல்துறையினர் கடந்த வாரம் கஸ்டடியில் விசாரித்து வந்தனர். திருட்டு வழக்கு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அஜித் குமாரை, காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக புகார் எழுந்தது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய காவலர்கள் கைது செய்யப்பட்டவிட்டனர்.

காவல்துறையின் இதுபோன்ற சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. மாநிலம் முழுவதும் காவல்துறையினர் ஈடுபடும் மனித உரிமை மீறல் செயல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மறுபக்கம், ஒருசிலர் செய்யும் தவறுகளால் மொத்த காவல்துறையையும் குற்றம் சொல்லக் கூடாது என்றும் சில காவலர்கள் கூறி வருகின்றன.
இந்நிலையில் கோவை க்யூ பிரான்ச் (Q Branch) காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் தலைமை காவலர் பார்த்திபன். இவர் தன் மனைவி, குழந்தைகளுடன் சின்னியம்பாளையம், ஆர்ஜி புதூர் பகுதியில் வசித்து வருகிறார். பார்த்திபன் மனைவி ரேவதி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே பார்த்திபன் நேற்று தன் மனைவியுடன் இரவு கொச்சின் புறவழிச் சாலையில் உணவருந்த சென்றிருந்தார். இரவு 12 மணியளவில் அவர் மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவர்களை சுற்றி வளைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர்கள் பார்த்திதொடர்ந்து கண் இமைக்கும் நொடியில் அந்த மர்ம நபர்கள், தலைமை காவலர் பார்த்திபனை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கி வெட்டியுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து தாலி செயின் மோதிரம் மற்றும் பிரேஸ்லெட் உள்ளிட்ட 5 சவரன் தங்க நகைகளை பறித்து சென்று விட்டனர். ஆள் நடமாட்டல் இல்லாத பகுதி என்பதால் பார்த்திபன் - ரேவதிக்கு உதவ யாரும் இல்லை.
சிறிது நேரத்தில் பார்த்திபன், காவல் உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் சொல்லியுள்ளார். அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வரை அவரே சென்று, பிறகு அங்கிருந்து மற்ற வாகனங்களிடம் உதவி கேட்டு கோவைஅரசு மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுள்ளார். மேல் சிகிச்சைக்காக பார்த்திபன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்த சூலூர் காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வரும் நிலையில், காவல்துறையை சேர்ந்தவரையே வெட்டி, நகை பறித்து சென்ற சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications