துணை குடியரசுத் தலைவர் பயணிக்கும் சாலையில் போதை ஆசாமிகள் செய்த அலப்பறை.. காவல் துறை வெளியிட்ட வீடியோ
கோவை: துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நேற்று கோவைக்கு வந்தார். குடியரசு துணைத் தலைவர் வருகையை முன்னிட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸாரின் பாதுகாப்பை மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் சாலையில் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கோபமடைந்த பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவை மாநகர காவல்துறை பாதுகாப்பை மீறி துணை குடியரசுத் தலைவர் பயணிக்கும் சாலையில் இருசக்கர வாகனத்தை ஒருவழிப் பாதையில் ஓட்டி விபத்தை ஏற்றி ஏற்படுத்திய நபர், தான் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கும் வீடியோ காட்சிகளை கோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மாலை அணிவிக்க வரும் நேரத்தில், இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் அதை மீறி இரு சக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். இளைஞர்கள் விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகளும் வெளியானது.

விபத்தை ஏற்படுத்தியவர்கள் கோவை கரும்பு கடை பகுதியை சேர்ந்த அனீஸ்ரகுமான், ஆசிக் என்பதும், அவர்கள் போதையில் இருந்ததும் தெரியவந்தது. போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கோவை போலீசாரின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இளைஞர்கள் உள்ளே நுழைந்ததாக பா.ஜ.கவினரும் குற்றம்சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர்.
கோவை மாநகர காவல் துறையினரின் பாதுகாப்பு குறைபாடு காரணமாக போதை இளைஞர்கள் பாதுகாக்கபட்ட பகுதிக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மது போதை காரணமாகவே பாதுகாப்பு பகுதிக்குள் வந்ததாக விபத்தை ஏற்படுத்திய இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கோவை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவானது, காட்சிகள் எடிட் செய்யப்பட்டு பேசும் இளைஞரின் முகம் மறைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த தங்களை காவல் துறையினர் பிடித்து அபராதம் விதித்து விடுவார்கள் என்ற பயத்தில், ஒருவழிப் பாதையில் வேகமாக பயணித்ததாக அந்த வீடியோவில் பேசும் இளைஞர் கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பாதுகாப்பு குறைபாடு காரணமில்லை, குடிபோதைதான் அத்துமீற காரணம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் காவல் துறை சார்பில் இந்த வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications