கோவை மாணவி பாலியல் வன்கொடுமை.. பல மாதங்களாக கண்காணித்த 3 பேர் கும்பல்? காவல்துறை விளக்கம்
கோவை: கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் சரவண சுந்ந்த விளக்கம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது காதலனும் அடிக்கடி விமான நிலைய பின்புற பகுதியில் சந்திப்பதை தெரிந்து கொண்டு பல மாதங்களாக 3 பேர் கும்பல் கண்காணித்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அதனை காவல் ஆணையர் மறுத்துள்ளார்.
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதற்கான தனியார் விடுதியிலும் தங்கி இருந்துள்ளார். இதனிடையே ஆட்டோமொபைல்ஸ் கடை நடத்தும் இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால், மாணவி தனது காதலனுடன் வெளியில் வந்திருக்கிறார். கோவை விமான நிலையம் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரில் அமர்ந்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேர், காரில் தனியாக காதல் ஜோடி இருப்பதை பார்த்துள்ளனர். இதனையடுத்து காரின் கதவை தட்டி திறக்குமாறு மிரட்டி இருக்கின்றனர்.
ஆனால் அச்சத்தில் காதல் ஜோடி காரின் கதவை திறக்கவில்லை. தொடர்ந்து அரிவாளால் காரின் கண்ணாடியை உடைத்து காதலனை தாக்கியுள்ளனர். இதன்பின் மாணவியை அந்த கும்பல் இழுக்க, அந்த இளைஞர் விடாமல் பிடித்துக் கொண்டுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அரிவாளால் இளைஞரின் தலையில் அடித்துள்ளது. இதனால் அவர் மயங்கி இருக்கிறார்.
இதனிடையே மாணவி சத்தம் கொடுத்துள்ளார். ஆனாலும் அந்த கும்பல் மாணவியை மறைவான இடத்திற்கு இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனிடையே மயக்கம் தெளிந்த இளைஞர், தனது காதலியை தேடி இருக்கிறார். காணவில்லை என்று தெரிந்த பின், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன்பின் மாணவியை சுமார் ஒரு மணி நேரமாக தேடி இருக்கின்றனர். அப்போது புதரில் மாணவி நிர்வாண கோலத்தில் கிடந்திருக்கிறார். அவரது உடல் முழுக்க காயம் இருந்திருக்கிறது. பின்னர் போலீசார் மாணவியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தது. இந்த நிலையில் கோவை துடியலூர் அருகே 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்த போது, காவலர் சந்திரசேகரை அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதனால் தற்காப்புக்காக 2 பேர் இரு கால்களிலும், ஒருவரை ஒரு காலிலும் சுட்டுள்ளனர்.
பிடிபட்ட மூவரின் பெயர் சதீஷ், கார்த்திக் மற்றும் தவசி என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. இதனிடையே இவர்கள் மூவரும் குறித்து அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது காதலனும் அடிக்கடி விமான நிலைய பின்புற பகுதியில் சந்திப்பதை தெரிந்து கொண்டு பல மாதங்களாக 3 பேரும் கண்காணித்து வந்திருக்கின்றனர் என்று தெரிய வந்தது.
இதுதொடர்பாக காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்துள்ளார். இந்த சம்பவம் எதேச்சையாக நடந்ததாகவும், மது போதையில் திருட்டு வண்டியில் சென்று இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications