கோவை லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு.. அடுத்தடுத்து கார்கள் மீது மோதல்.. ஸ்தம்பித்த போக்குவரத்து
கோவை: கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே லாரி ஓட்நருக்கு, வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் லாரி கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து 4 கார்கள் மீது மோதியது. கிளீனர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தின் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, பேரூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் லாரி ஓட்டுநராக இருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இளையரசு என்பவர் லாரியின் கிளீனராக இருக்கிறார். இவர்கள் இருவரும் நேற்று இரவு சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு சிலிக்கான் லோடு ஏற்றி சென்றுள்ளனர். லாரியை எடுக்கும்போது குமார் நன்றாகத்தான் இருந்துள்ளார்.

லாரி ஓட்டுநருக்கு மாரடைப்பு
லாரி துடியலூர் சாலையில் இருந்து சரவணம்பட்டி சாலையை இணைக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநர் குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக லாரி அவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தொடர்ந்து லாரி எதிர் திசையில் பாய்ந்து, அந்த வழியாக சென்று கொண்டிருந்த 4 கார்கள் மீது மோதியது.
குமார் அப்படியே சரிய, லாரி கட்டுப்பாட்டை இழந்து கார்கள் மீது மோதிக் கொண்டிருந்தது. கிளீனர் இளையரசு துரிதமாக செயல்பட்டு லாரியின் பிரேக்கை அழுத்தி வாகனத்தை சாலையின் நடுவே நிறுத்தினார். இதனால் பெரிய விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. பிறகு அக்கம், பக்கத்தினர் உதவியுடன் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அதிர்ச்சி சிசிடிவி
அவரின் உடல் நிலை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பரிந்துரை செய்தனர். இதையடுத்து குமாரை கோவை அரசு மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓட்டுநர் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் சரவணம்பட்டி அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து காந்திபுரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு அவர்கள் விபத்துக்குள்ளான லாரி மற்றும் கார்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணை
இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குமார் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாரி ஓட்டுநருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications