ஓடும் ரயிலில் கல்லூரி மாணவியிடம் அசிங்கமாக நடந்து கொண்ட கோவை காவலர் – வீடியோவால் சிக்கல்
கோவை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதை மருந்து புழக்கம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்து வருகிறது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரே குற்ற செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் ஓடும் ரயிலில் கோவை கல்லூரி மாணவிக்கு, காவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி நடந்துள்ளது. இதை அந்த மாணவி வீடியோ எடுத்து புகார் அளிக்க, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வன்முறைகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. வீடு, பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, பேருந்து, ரயில் உள்ளிட்ட எந்த பகுதியும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. தமிழ்நாட்டிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

ஓடும் ரயிலில் பகீர்
சமீபத்தில் கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி 3 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருந்தார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
ஆனால் திருவண்ணாமலையில் காவல்துறையினரே பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். அதே பாணியில் கோவையில் ஒரு காவலர் செய்த அசிங்கமான காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் சேக் முகமத். இவர் பணி நிமித்தமாக கடந்த சனிக்கிழமை சென்னை சென்றிருந்தார்.
மாணவிக்கு காவலர் பாலியல் தொல்லை
பணியை முடித்துவிட்டு அவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை ரயில் நிலையத்திற்கு இன்டர்சிட்டி ரயிலில் வந்துள்ளார். கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் சென்னை சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். அவரும் விடுமுறைக்காக அதே ரயிலில் கோவை வந்துள்ளார். சேக் முகமது மற்றும் மாணவிக்கு அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்தபோது, காவலர் சேக் முகமத் அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி காவலர் பாலியல் தொல்லை கொடுத்ததை தன்செல்போனில் வீடியோ பதிவு செய்தார். இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி ரயில்வே காவல் துறையினருக்கு புகாரளித்துள்ளார்.
பணியிடை நீக்கம்
தகவலறிந்த ரயில்வே காவல் துறையினர், ஷேக் முகமதை ரயிலில் இருந்து இறக்கி விட்டு விசாரணை நடத்தினார்கள். இதில் குற்றம் உறுதியானதால், ரயில்வே காவல்துறையினர் ஷேக் முகமது மீது வழக்குப்பதிவு செய்தனர். சேக் முகமத் பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications