மதுக்கரையில் மதுபோதையில் வந்த மருமகன்.. வீட்டுக்குள் நுழைந்து.. அடுத்து நடந்த பயங்கரம்
கோவை: கோவை மதுக்கரையில் மாமனாரை கட்டையால் அடித்து மருமகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மதுக்கரை மார்க்கெட் வி.ஓ.சி வீதியை சேர்ந்தவர் கனேசன் (50). கார்பண்டராக வேலை செய்து வந்தார். இவரது மருமகன் அரிசிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த விக்னேஷ்வரன் (21). இவரும் கனேசனுடன் கார்பண்டர் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கனேசன், விக்னேஷ்வரனுக்கு சம்பள பாக்கி வைத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விக்னேஷ்வரன் அடிக்கடி கனேசனிடம் கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி மது போதையில் கனேசனின் வீட்டிற்கு வந்த விக்னேஷ்வரன், சம்பள பாக்கியை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து கனேசனை சரமாரியாக தாக்கி உள்ளார். இதையடுத்து படுகாயமடைந்த கனேசனை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக கனேசனின் மனைவி குமாரி மதுக்கரை போலீஸில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் மருமகன் விக்னேஷ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்து, அவினாசி சப் ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த கனேசன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications