ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை சுவாதி ஸ்ரீ! 3வது முயற்சியில் அசத்தல்
கோவை: ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த கோவை மாணவி சுவாதி ஸ்ரீக்கு பாராட்டுகள் குவிகின்றன.
நாடு முழுவதும் 712 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் அகில இந்திய அளவில் குடிமையியல் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி நடந்தது.
இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகின. இதில் தேர்ச்சி பெற்றவர்கள பிரதான தேர்வை எழுதினர். இந்த தேர்வு ஜனவரி 7 முதல் 16 ஆம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்டன.

தேர்வு
பிரதான் தேர்வில் வென்றவர்களுக்கு கடந்த ஏப்ரல் 14 முதல் மே 24 வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவு நேற்றைய தினம் (மே 30) அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி சர்மா தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.

கோவை மாணவி
அது போல் கோவையை சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ தேசிய அளவில் 42 ஆவது இடத்தையும் தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கோவை குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர். இவரது தந்தை இன்சூரன்ஸ் மற்றும் ஷேர் மார்க்கெட்டிங் துறையில் பணியற்றி வருகிறார்.

ஊட்டி
தாய் தபால் துறையில் பணியாற்றி விஆர்எஸ் வாங்கிவிட்டார். ஸ்வாதி ஸ்ரீ தனது தொடக்கக் கல்வியை ஊட்டியிலும் உயர் நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை குன்னூரிலும் படித்தார். இவர் தஞ்சையில் உள்ள கல்லூரியில் வேளாண்மை படித்துள்ளார்.

விவசாயம்
இவர் கிராமங்களில் விவசாயத்தை பற்றிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள செல்லும் போது விவசாயிகளுடன் தங்கி அவர்களின் பிரச்சினைகளை அறிந்து அதற்கு எப்படி தீர்வு காணலாம் என யோசனை செய்துள்ளார். இதற்கு உயர் பதவியை பெற்றால்தான் முடியும் என அவர் நினைத்ததால் சிவில் சர்வீஸ் மூலம் ஐஏஎஸ் ஆவது என எண்ணி அதற்காக முழு வீச்சில் இறங்கினார்.

மூன்றாவது முயற்சியில் ஐஏஎஸ் வெற்றி
சென்னையில் உள்ள மனிதநேயம் மற்றும் அறம் ஐஏஎஸ் அகாதெமியில் தங்கியிருந்து பயிற்சி பெற்றார். இரண்டாவது முறை தேர்வு எழுதிய அவருக்கு ஐஆர்எஸ் பதவி கிடைத்தது. இருந்தும் ஐஏஎஸ் தேர்ச்சி பெற கடுமையாக உழைத்து 3ஆவது முறை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார்.












Click it and Unblock the Notifications