கோவை உக்கடத்தில் அடுத்த பிரம்மாண்டம்.. சுரங்கப்பாதையுடன்.. ஒன்றல்ல.. இரண்டு.. சூப்பர் முடிவு
கோவை: கோவை உக்கடம் ஆத்துபாலம் மேம்பாலப்பணிக்காக இடிக்கப்பட்ட உக்கடம் பஸ் நிலையம் ரூ.20 கோடியில் சுரங்கப்பாதையுடன் இரண்டு நிலையங்களாக அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
சென்னையைப் போல் கோவையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் என்று ஒன்று இல்லை. திருச்சியைச் சுற்றி உள்ள திருச்சி, கரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்பட டெல்டா பகுதிகள் மற்றும் மதுரை, தேனி, திண்டுக்கல்,திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை உள்பட தென்மாவட்ட பேருந்துகள் சிங்காநல்லூரில் நிறுத்தப்படுகின்றன.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள், சென்னை, ஈரோடு, சென்னை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட வட மாவட்ட பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இதேபோல் உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பழனி, உடுமலை, பொள்ளாச்சி, பாலக்காடு, திருச்சூர் மற்றும் கேரள மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் மற்றும் நகர பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த உக்கடம் பேருந்து நிலையம், மேம்பால பணிகளுக்காக ஏற்கனவே இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந் உக்கடம்- ஆத்துப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கியது. தற்போது உக்கடம் மேம்பால பணிகள் முடிவடைந்து விட்டதால் உக்கடத்தில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.
மேம்பால பணிகளுக்காக உக்கடத்தில் ஏற்கனவே உள்ள பஸ் நிலையத்தில் வளாகச் சுவர் மற்றும் கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், பஸ் நிலையத்தை சீரமைத்து நவீனப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதேபோல் உக்கடம் காவல் நிலையத்திற்கு எதிரே காலியாக உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்கவும் முடிவு செய்துள்ளார்கள் அதிகாரிகள். இந்த பஸ் நிலையங்கள் கட்ட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.. நெடுஞ்சாலை பகுதியில் 2 பஸ் நிலையமும் அமைவதால் பொதுமக்கள் கடந்து செல்ல வசதியாக 100 மீட்டர் நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கவும் முடிவு செய்துள்ளார்கள். அதற்கு சுமார் ரூ.8 கோடி செலவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளியூர் செல்ல ஒரு பஸ்நிலையம், நகர பகுதிகளுக்கு செல்ல ஒரு பஸ் நிலையம் என 2 பேருந்து நிலையங்கள் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. உக்கடத்தில் மேம்பாலம் இந்த மாதம் திறக்கப்பட உள்ள நிலையில் அடுத்தகட்டமாக பேருந்துநிலையம் அமைக்கப்பட உள்ளது குறிப்பித்தக்கது.












Click it and Unblock the Notifications