"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு!
கோவை: "அம்மா குணமாகி வரணும். வரும் சட்டசபை தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" என வேண்டி, கோவையில் மாகாளி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி தமிழ் புத்தாண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார் வானதி சீனிவாசனின் இளைய மகன் கைலாஷ்.
கோவை வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ போட்டியிடுகிறார். வானதி சீனிவாசன் கடந்த சில நாட்களாக தொகுதிக்குள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஒரு தனியார் மருத்துவமனையில் வானதி சீனிவாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால், வானதி சீனிவாசன் இறுதிக்கட்ட பரப்புரைகளில் மட்டுமே பங்கேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேட்பாளர் வானதி சீனிவாசன் இல்லாமலேயே, பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கோவை வடக்கு தொகுதிக்குள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வானதி சீனிவாசனின் மூத்த மகன் ஆதர்ஷ் கடந்த சில நாட்களாக, கோவை வடக்கு தொகுதியில் நடைபெறும் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். மேலும் பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இணைந்து வீடு, வீடாக சென்று வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். வானதி சீனிவாசனின் இளைய மகன் கைலாஷும், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே தனது உடல்நிலை குறித்து வானதி சீனிவாசன், மருத்துவமனையில் இருந்து எடுத்த ஒரு வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அதில் அவர், "உங்களது அன்பினாலும், பிரார்த்தனையாலும் விரைவாக உடல்நலம் தேறிக்கொண்டு இருக்கிறேன். ஒரிரு நாட்களில் உங்களை சந்திக்க இருக்கிறேன். நமது தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் எனக்காக தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரிக்கும் கூட்டணி கட்சியினருக்கும் மனப்பூர்வமான நன்றிகள். தமிழகத்தின் மீது அன்பும், ஆற்றலின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்துள்ள பிரதமர் மோடிக்கு, வெற்றியின் மூலம் நமது அன்பினை தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சித்திரை திருநாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டும், தேர்தல் களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் கோவை வடக்குத் தொகுதியில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மணியக்காரன்பாளையம் 19-வது வார்டில் அமைந்து உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த ஆன்மீக நிகழ்வில், கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் இளைய மகன் கைலாஷ் பங்கேற்றுத் தனது தாயின் உடல்நலம் வேண்டியும், கூட்டணி வெற்றிக்காகவும் பிரார்த்தனை செய்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன் விரைவில் முழு குணமடைந்து மக்கள் பணியைத் தொடர வேண்டும் என பாஜக தொண்டர்கள் வேண்டுதல் செய்துள்ளனர். இதற்காகக் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்குப் புத்தாண்டு விருந்தாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதனை அ.தி.மு.க தொகுதி பொறுப்பாளர் வடவள்ளி சந்திரசேகர் மற்றும் வானதி சீனிவாசனின் இளைய மகன் கைலாஷ் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் வார்டு நிர்வாகிகள் மற்றும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனைத் தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications