கோவையில் ஏசி கூலிங் வராத பிரச்சனை.. 3 ஆயிரத்துக்கு 20 ஆயிரம் தரப்போகும் பிரபல நிறுவனம்
கோவை: ஏ.சி. (ac service coimbatore) வாங்குவோருக்கு ஒரு வருடம் வாரண்டி வழங்கப்படும். அந்த காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் வாரண்டி கிளைம் செய்ய முடியும். என்னதான் ஏசிக்கு வாரண்டி இருந்தாலும் கோடை காலத்தில் ரிப்பேர் ஆனால் ஆட்கள் பற்றாக்குறையால் சர்வீசுக்கு ஆட்கள் உடனே கிடைப்பது இல்லை.. இப்படியான சூழலை எதிர்கொண்ட கோவையைச் சேர்ந்தவர் சம்பந்தப்பட்ட ஏசி நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருக்கு 20000 வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால், மக்கள் ஏசி விற்பனை செய்யும் கடைகளில் கடந்த இரண்டு மாதங்களாக குவிந்தனர். இதேபோல் பலர் ஆன்லைனிலும் ஏசி வாங்கினார்கள். ஏசியை பொறுத்தவரை ஆன்லைனிலோ அல்லது கடைகளிலோ எப்படி வாங்கினாலும் வாரண்டி உள்ளது.

ஏசி வாங்கி ஓராண்டிற்கு ஏற்படும் பழுதிற்கு நிறுவனமே பொறுப்பாகும். அந்த வகையில் ஏசி வாங்கிய ஒரு சிலருக்கு ஏசி சரியாக வேலை செய்யாது. கியாஸ் தீர்ந்திருக்கும்.. சரியாக பிட்டிங் செய்திருக்க மாட்டார்கள். குறைபாடு உள்ள ஏசிகள் மாட்டப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. இப்படி ஏசியில் ஏதாவது குறைபாடு இருந்தால், அவற்றை நிறுவனங்கள் சரி செய்து தர வேண்டியது கட்டாயம் ஆகும்.
ஆனால் தற்போது கோடை காலம் என்பதால் பணியாளர் பற்றாக்குறைகள் ஏற்படுவது இயல்பு. உடனே சர்வீசுக்கு வர மாட்டார்கள். இப்படியான சூழலை எதிர்கொண்ட கோவை இளைஞருக்கு ஏசி நிறுவனம் மற்றும் சர்வீஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த 34 வயதாகும் சிபி என்பவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஒரு பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 2 ஏ.சி. கருவிகளை ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் செலுத்தி வாங்கியிருந்தேன். அந்த ஏ.சி. நிறுவனம் ஒரு ஆண்டுக்கு இலவச சர்வீஸ் சேவை வழங்குவதாக தெரிவித்தது. ஆனால் இலவச சர்வீஸ் சேவைக்கு விண்ணப்பித்த போது காலதாமதம் செய்தனர்.
இதனால் எங்கள் வீட்டில் குளிரூட்டும் தன்மையில் குறைவு ஏற்பட்டது. அதேநேரம் தொழில்நுட்ப ஊழியர்களை அனுப்புவதாக கூறினர். அதிலும் தாமதம் ஏற்பட்டது. இதனால் வேறு ஒருவரிடம் ரூ.3 ஆயிரம் செலுத்தி சர்வீஸ் செய்யும் கட்டாயம் ஏற்பட்டது. எனவே சம்பந்தப்பட்ட ஏ.சி. தயாரிப்பு நிறுவனம், சர்வீஸ் மையம் ஆகியவை உரிய சேவை அளிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு சிபி மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கோவை நுகர்வோர் மன்ற நீதிபதி தங்கவேலு, உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், உற்பத்தி நிறுவனம் மற்றும் சேவை நிறுவனம் ஆகியவை இணைந்து சேவை குறைபாடுக்கு இழப்பீடாக ரூ.15 ஆயிரம், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications