சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை! கோவையில் நாளை கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம்!
கோவை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் கேரள அரசை கண்டித்து கோவையில் கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நாளை நடைபெறவுள்ளது.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுப்பில் நடத்தப்படவுள்ள இந்த போராட்டத்துக்கு திமுக, அதிமுக, பாஜகவை தவிர்த்து மற்ற அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் வருமாறு;
''அட்டப்பாடி அருகே கூலிக்கடவு என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு தடுப்பணை கட்டியுள்ளது. இதன்மூலம், கோவை மாவட்டத்திற்கு குடிநீருக்கும், விவசாயத்திற்கும் பயன்படும் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே சிறுவாணி அணையில் பெரும் மழை பெய்யும் போதும் 50 அடி உயரமுள்ள அணையில் 45 அடிக்கு மேல் தண்ணீர் நிரப்ப கேரளா அரசு அனுமதிப்பதில்லை. சிறுவாணி அணையை பராமரிக்க கேரளா அரசுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது.
ஆனாலும், சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்லும் பாதையை சீரமைக்காமல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வுக்குகூட சிறுவாணி அணைக்கு சாடிவயல் வழியாக செல்ல முடியாமல், ஆனைக்கட்டி வழியாக சுற்றி செல்லக்கூடிய நிலை உள்ளது.
இந்தச் சூழலில் கேரளா மாநில அரசு மீண்டும் ஒரு தடுப்பணை கட்டியிருப்பது தமிழர்களை வஞ்சிக்கும் செயல். கேரளா அரசின் இந்த போக்கை கண்டித்து கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் நாளை காலை 10 மணி அளவில் கோவை காந்திபுரத்தில் நடைபெறும்.'' இவ்வாறு அந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கேரள அரசுடன் முதலமைச்சர் ஸ்டாலின் நட்புறவு பேணி வரும் நிலையில், கேரளா பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தவிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
இதனிடையே கேரளா பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டத்தை கைவிட வைப்பதற்கான முயற்சிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னெடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications