கோவை டூ நீலகிரி.. ஒரு ஆள் கிட்ட நெருங்க முடியல.. ஆ.ராசாவுக்கு அப்படியொரு வரவேற்பு தந்த திமுக.. திக..!
கோவை: திமுக துணை பொதுச்செயலாளராக 2-வது முறை பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நீலகிரி சென்ற ஆ.ராசாவுக்கு, வான வேடிக்கையுடன் கூடிய வரவேற்பை தந்து அசத்தியிருக்கிறார்கள் திமுகவினர்.
கோவை விமான நிலையத்தில் தொடங்கி நீலகிரி வரை ஆ.ராசாவுக்கு பல்வேறு இடங்களில் மேடை போட்டு வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆ.ராசாவுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ஆள் கூட கிட்ட நெருங்க முடியாத வகையில் அவருக்கு அரணாக நின்றார்கள் திமுகவினர்.

நீலகிரி தொகுதி
திமுகவின் 15-வது பொதுக்குழு தேர்தலில் 2வது முறையாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதல்முறையாக தனது சொந்த தொகுதியான நீலகிரி சென்றிருக்கிறார் ஆ.ராசா. சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்ற ஆ.ராசாவுக்கு அங்கு மேளதாளங்கள் முழங்க ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தன்னை வரவேற்க வந்த கூட்டத்தை கண்டு நெகிழ்ந்து போன ஆ.ராசா, காரிலிருந்த சன் ரூஃபை திறந்து திறந்தவெளியில் கட்சியினரை பார்த்து கை அசைத்தபடி விமான நிலையத்தை கடந்தார்.

உற்சாக வரவேற்பு
கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அன்னூர், மேட்டுப்பாளையம், என பல இடங்களில் கட்சியினர் தன்னை வரவேற்க காத்திருந்ததை கண்டு காரை நிறுத்தி இறங்கிவிட்டார் ஆ.ராசா. அவர்கள் அளித்த பொன்னாடைகள், புத்தகங்களை பெற்றுக்கொண்டு மைக் பிடித்து பேசவும் செய்தார் ஆ.ராசா. இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், ஆ.ராசாவை வரவேற்க வந்தவர்கள் திமுகவினர் மட்டுமல்ல திராவிடர் கழகத்தினரும், மனிதநேய மக்கள் கட்சியினரும் அதிகளவில் வந்திருந்தார்கள்.

பாஜகவினர் போராட்டம்
அண்மையில் ஆ.ராசா பேசிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜகவினர், போராட்டம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ஆள் கூட கிட்ட நெருங்க முடியாத வகையில் அவருக்கு அரணாக நின்றார்கள் திமுக கூட்டணிக் கட்சியினர். கனிமொழி, துரைமுருகன் ஆகியோருக்கு கூட திமுகவினர் மட்டுமே காட்பாடியிலும்,தூத்துக்குடியிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் ஆ.ராசாவுக்கு மட்டுமே திமுகவினர் மட்டுமல்லாமல் திமுக கூட்டணிக் கட்சியினரும் நீலகிரி சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

தொகுதியில் முகாம்
ஓரிரு நாட்கள் நீலகிரியில் ஆ.ராசா முகாமிட்டிருப்பார் என்றும் பொதுமக்களின் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரியில் பாஜக களமிறங்க திட்டமிட்டுள்ள நிலையில் ஆ.ராசா அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications