பொள்ளாச்சியில் கொடி நாட்டிய திமுக... 39 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக வென்றது
Recommended Video
பொள்ளாச்சி: 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக நேரடியாக வெற்றி பெற்றுள்ளது.
542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதில், பாஜக கூட்டணி 300 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றி உள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் போக, மீதமுள்ள 20 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது திமுக. அதில், அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடும், 8 மக்களவைத் தொகுதிகளில் பொள்ளாச்சியும் ஒன்றாகும். பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சண்முகசுந்தரமும், அதிமுக சார்பில் மகேந்திரனும் போட்டியிட்டனர்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் 22 வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 5,54,230 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 3,78,347 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி 59,693 வாக்குகள் பெற்று மூன்றாம் பிடித்தது. இறுதியில், 1,75,883 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் வெற்றி பெற்றார்.
இதையடுத்து 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி தொகுதியில் திமுக நேரடியாக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு திமுக வேட்பாளர் சி.டி.தண்டபானி வெற்றி பெற்றிருந்தார்.
இதன்பின் திமுக கூட்டணியில் 1996-ல் தமாகா, 1999, 2004 லில் மதிமுக வென்றது. இதன் பின்னர் நடந்த இரு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி கனியை ருசித்தது. தற்போது, மீண்டும் 39 ஆண்டுகளுக்குப் பின் திமுகவின் வசம் பொள்ளாச்சி தொகுதி வந்துள்ளதால், அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக பிரமுகர்களின் பெயர்கள் அடிப்பட்ட சம்பவம், அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.