'அன்புள்ள அண்ணா, அண்ணி எங்களை மன்னித்து விடுங்கள்'.. கோவை லாட்ஜில் பிணமாக கிடந்த தம்பதி கடிதம்
கோவை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பழனிசாமி, வத்சலா தம்பதியின் 7 வயது மகன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். மகனை இழந்த துக்கத்தில் இருந்த சிவகாசி தம்பதியை, பழனிசாமியின் அண்ணன் கோவைக்கு அழைத்து சென்று ஆறுதல் கூறி வந்தார். எனினும் அதில் இருந்து மீளமுடியாமல் தவித்த தம்பதி, கோவையில் உள்ள லாட்ஜ் அறையில் விஷம் குடித்து உயிரையே மாய்த்துக் கொண்டனர். இது தொடர்பாக உருக்கமாக கடிதம் எழுதிவைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பழனிசாமி . இவருக்கு 39 வயது ஆகிறது. இவருடைய மனைவி வத்சலா(35) இவர்களுக்கு 7 வயதில் சுரேஷ் என்ற மகன் இருந்தார். பழனிசாமி வத்சலா தம்பதி சிவகாசியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்கள். சிறுவன் சுரேசுக்கு கடந்த மார்ச் மாதம் திடீரென்று வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக பல மருத்துவமனைகளுக்கு அவர்கள் அழைத்து சென்றுள்ளனர், ஆனாலும் சுரேசுக்கு காய்ச்சல் சரியாகவில்லை. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் சுரேஷ் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். தனது ஒரே மகனை பறிகொடுத்ததால், பழனிசாமி வத்சலா தம்பதி மிகவும் சோகத்தில் இருந்தனர்.

பல நாட்களாக முடங்கி கடந்த தம்பதியை, பழனிசாமியின் அண்ணன் முருகேசன்(43) கோவைக்கு அழைத்து வந்தார். முருகேசன் கோவை அருகே வேடப்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகனை இழந்த சோகத்தில் இருக்கும் தனது தம்பி பழனிசாமி மற்றும் வத்சலாவை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேடப்பட்டிக்கு அழைத்து வந்திருக்கிறார். பழனிசாமி மாணவர்களுக்கு வீட்டில் டியூசன் எடுத்து வாழ்ந்து வந்தார். வத்சலா தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். அவர்கள் 2 பேரும் கோவை வந்தாலும் உயிரிழந்த தங்களது மகனை நினைத்து துக்கத்திலேயே இருந்தனர். அவர்களுக்கு முருகேசன் அடிக்கடி ஆறுதல் கூறி வந்தார்.
இதனிடையே முருகேசன், தனது தம்பி மற்றும் தம்பி மனைவியிடம் கவலையை மறக்க வெளியில் சென்று வருமாறு கூறியுள்ளார். இதன்படியே சரி என்று அவர்களும் வெளியில் சென்றுள்ளனர். வெளியில் சென்றவர்கள் ஒரேஅடியாக உலகத்தையே விட்டே சென்றுவிட்டார்கள். பழனிசாமி வத்சலா தம்பதி லாட்ஜில் அறை எடுத்து தங்கி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் 2 பேரும் கடந்த நவம்பர் 3-ந் தேதி காந்திபுரம் நேரு வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்கள். அன்று மாலை லாட்ஜ் மேலாளரிடம், மேலும் ஒரு நாள் தங்க இருப்பதாக கூறியுள்ளார்கள்.
நேற்று முன்தினம் காலையில் இருந்து அந்த தம்பதி வெளியே வரவில்லை. மதியமும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையின் கதவை தட்டியிருக்கிறார்கள். பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படாததால் காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து, தம்பதி தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பழனிசாமி, வத்சலா ஆகியோர் கட்டிலில் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர். அவர்கள் அருகே குளிர்பானமும், பூச்சிக்கொல்லி மருந்தும் இருந்ததை கண்டனர்.
இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், மகனை இழந்த துக்கம் தாங்க முடியாமல் குளிர்பானத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து தம்பதி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதனிடையே தற்கொலை செய்த லாட்ஜ் அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது பழனிசாமி வத்சலா தம்பதி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர்கள் கூறுகையில்,
எங்களுடைய ஒரே மகன் சுரேசை நாங்கள் மிகவும் நேசித்தோம். அவன் தான் எங்களுடைய உலகம். ஒரே மகனான அவனை நாங்கள் மிகவும் நேசித்து பார்த்து, பார்த்து வளர்த்து வந்தோம். பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர் ஒரு நிமிடம் கூட அவனை விட்டு பிரிந்தது இல்லை. ஆனால் இப்போது எங்களை விட்டு நிரந்தரமாக அவன் பிரிந்து போய்விட்டான்.
அவன் இல்லாத இந்த வாழ்க்கையை எங்களால் நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை. 7 வருடம் நாங்கள் அவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டோம். இப்போது அவன் இல்லாததால், ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்க வருடம் போல இருக்கிறது. அவனால் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனவே அவன் இருக்கும் இடத்துக்கே நாங்கள் செல்கிறோம். அன்புள்ள அண்ணா... அண்ணி... எங்களை மன்னித்து விடுங்கள். நாங்கள், மகனை பிரிந்து விட்டோம். இதனால் வாழ பிடிக்கவில்லை.. எங்கள் சாவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எங்கள் அருமை மகன் சென்ற இடத்துக்கே செல்கிறோம். எங்களை மன்னித்து விடுங்கள்" இவ்வாறு அதில் எழுதி இருந்தது என காட்டூர் போலீசார் தெரிவித்தனர்.
தற்கொலை தடுப்பு உதவி எண்கள்: இதுபோன்று எந்த மனஅழுத்தம் சார்ந்த பிரச்சனை என்றாலும் உடனே மனநல ஆலோசனை பெறுங்கள். ஏனெனில் தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications