தேர்தல் நெருங்கியதும் உக்கிரமாகும் எடப்பாடி.. ஈரோட்டில் முறைகேடு நடப்பதாக குமுறல்
வாக்காளர்களை அடைத்து வைத்து திமுக ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வருவதாக இபிஎஸ் சாடியுள்ளார்.
கோவை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகாரளித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் வாக்காளர்களை அடைத்து வைத்து திமுக ஜனநாயக படுகொலையை நிகழ்த்தி வருவதாகவும் சாடியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவைக்கு விமானத்தில் வந்தடைந்தார்.

எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோவை விமான நிலையத்தில் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெறும் குளறுபடிகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். நேரடியாக திமுகவினர் செய்யும் விதி மீறல்கள் குறித்து கள ஆய்வு நடத்த வேண்டும்.

நடவடிக்கையே இல்லை
ஆளுங்கட்சியான திமுக வாக்காளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு சாப்பாடு போடுகிறது. ஈரோட்டில் நடைபெறும் குளறுபடிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

ஆடுகள் போல் வாக்காளர்கள் அடைப்பு
பகிரங்கமாக தேர்தல் விதிமுறைகள் மீறப்படும் சூழலில் பலமுறை இந்த விதிமுறைகள் குறித்து தான் பேசி வருகிறேன். ஆனால் அத்துமீறி வீடுகளுக்குள் நுழைவது எந்த விதத்தில் நியாயம். எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அத்துமீறிய நடவடிக்கைகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடைபெற்று வருகிறது. ஆடுகளை அடைப்பது போல வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து ஆளுங்கட்சியினர் முழுக்க முழுக்க விதிமீறலில் ஈடுபடுகின்றனர்.

கண்டிக்கத்தக்கது
மக்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி, இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. நாட்டின் முதலமைச்சர் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மக்கள் என்ன தீர்ப்பு கொடுப்பார்கள் என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரியவரும். ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் தற்போது எழுச்சியோடு ஈரோடு இடைத்தேர்தலில் பிரமாண்டமாகவும், கடுமையாகவும் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுக வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications