விடாத அமலாக்கத் துறை.. லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் 2ஆவது நாளாக சோதனை.. யார் இவர்?
கோவை: கோவையில் துடியலூரில் உள்ள லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் 2ஆவது நாளாக அமலாக்கத் துறை இன்றும் சோதனை நடத்தி வருகிறது.
கோவை துடியலூரில் வெள்ளைகிணர் பகுதியில் உள்ள மார்டின் வீட்டில் அமலாக்கத் துறை நேற்று முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி தொழிலில் கொடி கட்டி பறக்கும் மார்டின் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மார்டின் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. கடந்த முறை மார்டினின் மகன், உறவினர்கள், நிர்வாகிள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடந்த நிலையில் தற்போது மார்டினின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நேற்று தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.
அது போல் மார்டினின் வீட்டில் வருமான வரித் துறையும் நேற்று சோதனை நடத்தியது. அவருடைய மருமகனுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டன் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
பின்னணி என்ன?: கோவையை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் மார்டின். லாட்டரி விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறார். இவர் தற்போது சென்னையில் குடியிருந்து வருகிறார். கோவை- மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவில் மார்டினுக்கு சொந்தமாக வீடு உள்ளது.

இதற்கு அருகே அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்டினின் ரூ 457 கோடி சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டது. சென்னையில் அவருடைய மருமகன் வீட்டிலும் வருமான வரித் துறை சோதனை நடந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கோவையில் 3 இடங்களிலும் இந்த சோதனை நடந்தது. அது போல் சென்னை ஆழ்வார்பேட்டை போயஸ் கார்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மார்டின் மருமகன் வீடு உள்ளிட்ட சில இடங்களிலும் அமலாக்கத் துறையினர் மே மாதம் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications