திமுகதான் ஐசியூவில் இருக்கு.. தேர்தல் வரை கூட்டணி தாக்குப்பிடிக்குமா.. உதயநிதிக்கு எடப்பாடி பதிலடி!
கோவை: அதிமுக ஐசியூவில் இருப்பதாக விமர்சித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். திமுக தான் ஐசியூவில் இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி தானாக உடைந்து போகும்.. அதனை நாங்கள் உடைக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலையொட்டி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியால் பாஜகவிடம் இருந்து அதிமுகவை காப்பாற்ற முடியவில்லை. அதிமுக ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளது. அந்தக் கட்சி ஐசியூவில் அனுமதிக்கப்படும் போது, காப்பாற்றும் மருத்துவராக முதல்வர் வருவார் என்று கூறியதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். வால்பாறையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஐசியுவில் இருக்கிறது என்கிறார் உதயநிதி ஸ்டாலின். அப்படியா இருக்கிறது? நீங்கள் நேரலையில் பாருங்கள், மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள்.
எப்போது தேர்தல் வருமென்று எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள். அதிமுக நான்காக உடைந்து போனது என்று சொன்னார்கள். எல்லாம் ஒன்றாக இருக்கிறது. அதனை 2026 தேர்தலில் பார்ப்பீர்கள். திமுக தலைமையில் பல கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன. எங்களுக்கு கூட்டணி பலம் இருப்பதாக ஸ்டாலின் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அதிமுக மக்களை நம்பி மட்டுமே இருக்கிறது. திமுகதான் ஐசியுவில் இருக்கிறது. திமுக கூட்டணி கொள்கை கூட்டணி என்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே கொள்கை என்றால், ஒரே கட்சியாக இருந்திருக்கலாமே? ஏன் தனித்தனி கட்சியாக வைத்துள்ளீர்கள்? அதிமுகவை பொருத்தவரை கூட்டணி வேறு, கொள்கை வேறு. கூட்டணியை உடைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசுவதாக சொல்கிறார்கள்.
நாங்கள் உடைக்கத் தேவையில்லை, நீங்களாகவே உடைந்துபோவீர்கள். ஏனென்றால் கம்யூனிஸ்ட் கட்சி அப்படித்தான் பேசுகிறார்கள். 98% வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, தவறான கணக்காக உள்ளது என்கிறார்கள். அப்படியெனில் கூட்டணிக்குள் முரண்பட்ட கருத்து இருக்குது என்றுதானே அர்த்தம். தேர்தல் வரை தாக்குப்பிடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
ஆனைமலையாறு நல்லாறு திட்டம் கேரள மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறீர்கள், அதிமுக ஆட்சி இருந்தபோது நானும், வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நேரடியாக கேரள முதல்வர் முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடந்துவந்தது.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது, மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இந்த தொகுதி எம்எல்ஏ அமுல்கந்தசாமி நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார், அவர் இருக்கும்போது இத்தொகுதிக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார், நல்லவர் வல்லவர் திறமையானவர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications