"என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது".. பச்சைத் துண்டுடன் ஆவேசமாக பேசிய எடப்பாடி பழனிசாமி!
கோவை: "நான் யாருக்கும் அடிமையாக மாட்டேன்.. பணத்தாலும் புகழாலும் என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது." என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,916 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருந்த அன்றைய முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளியில் இன்று விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் வந்தார். எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் மாட்டுவண்டியில் வந்தார். விழாவிற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை மாட்டு வண்டியில் சீர் வரிசையாக கொண்டுவந்து வழங்கினர்.
பின்னர் இந்த விழா மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒரு விவசாயியாக தொடங்கி முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு எதுவும் செய்யாமலேயே வந்து திறந்து வைப்பவர்களும் உள்ளனர்.
விவசாயிகளின் பங்களிப்போடு அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர். விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன். 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. பணத்திற்கோ, புகழுக்கோ நான் மயங்கமாட்டேன். திறமையற்ற அரசு தான் தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் நிரப்புவது அவசியம் என அத்திக்கடவு அவினாசி திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசு நிதியை ஒதுக்கித் திட்டத்தை தொடங்கி வைத்தேன்.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தின் 85 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு விட்டன. ஆட்சி மாறியதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெறும் 15 சதவீத பணிகளை விரைந்து முடிக்காமல் திமுக அரசு கிடப்பில் போட்டது. எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவர முயற்சி செய்யாமல் திறந்து மட்டுமே வைத்து வருகிறது." என விமர்சித்துப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications