கோவை மாவட்ட திமுக வாட்ஸ்அப் குரூப்களில் தீயாக பரவும் "அந்த ஆடியோ.." கோபத்தோடு கவனிக்கும் தலைமை
கோவை: கோவை மாவட்ட திமுக வாட்ஸ் அப் குழுக்களிலும் கட்சிக்காரர்கள் அலைபேசிகளிலும் உலா வந்து கொண்டிருக்கும் ஒரு ஆடியோ திமுக தலைமையின் பொறுமையை சோதித்து பார்க்கும் வகையில் உள்ளது.
''மாவட்டச் செயலாளர் பதவி என் ... க்கு சமம்'' ''எவனா இருந்தாலும் வீடு ஏறிடுவேன்'' உள்ளிட்ட இன்னும் சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள் அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளன.
கோவை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மருதமலை சேனாதிபதி பேசியதாக கூறப்படும் அந்த ஆடியோ தான் அறிவாலயத்தில் பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறது.

ஊராட்சி மன்றத் தலைவர்
கோவை மாவட்ட அரிசிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் கணேசன். புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தை திறப்பதற்காக அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தேதி வாங்கித் தருமாறு கூறி மருதமலை சேனாதிபதியை சந்தித்திருக்கிறார். அப்போது அமைச்சரெல்லாம் வரமாட்டார், நீயே போய் திறந்துக்க எனக் கூறி கனேசனை மருதமலை சேனாதிபதி அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அரிசிபாளையம் கணேசன் தனக்கு நெருக்கமானவர்களிடம் இது தொடர்பான தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சீண்டும் வகையில்
இதையடுத்து அரிசிபாளையம் கணேசனை, மருதமலை சேனாதிபதிதொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படும் நிலையில்,, ''மாவட்டச் செயலாளர் பதவி என் ... க்கு சமம்'' ''எவனா இருந்தாலும் வீடு ஏறிடுவேன்'' உள்ளிட்ட இன்னும் சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ஆடியோவை அலறவிடுகிறது அந்தக் குரல். திமுக தலைமையையும், அமைச்சர் செந்தில்பாலாஜியையும் நேரடியாக சீண்டிப்பார்க்கும் வகையில் இந்த விவகாரம் அமைந்ததால் இது தொடர்பான சீரியஸ் விசாரணையை தொடங்கியுள்ளது அறிவாலயம்.

கிளிப்பிள்ளைக்கு போல்
அண்மையில் தான் தொண்டர்களையும், கீழ்மட்ட நிர்வாகிகளையும் அணுசரித்து நடக்க வேண்டும் என கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் சொல்லி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பாடம் எடுத்திருந்தார் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின். ஆனால் அதற்குள் இப்படி ஒரு நிகழ்வு அரங்கேறியிருப்பது முதல்வர் ஸ்டாலினுக்கு உச்சக்கட்ட கோபத்தை உண்டாக்கியுள்ளது. ஆடியோவில் இருப்பது தனது குரலே அல்ல என மருதமலை சேனாதிபதி திடமாக மறுப்பு தெரிவித்துள்ள சூழலில், அதன் உண்மை தன்மை குறித்து ஆராயவுள்ளது திமுக தலைமை.

கடும் நடவடிக்கை
அதில் உண்மைகள் வெளிவரும் பட்சத்தில் நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கோவை மாவட்ட திமுகவில் பெரியளவில் மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போது எழுந்துள்ள இந்த ஆடியோ விவகாரம் மாற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications