மனைவியுடன் தகராறு.. முத்தான இரு பிள்ளைகளின் கழுத்தை நெரித்த கணவன்.. கோவையில் அதிர்ச்சி
கோவை: கோவையில் குடும்பத் தகராறு காரணமாக இரு மகள்களை கொலை செய்து விட்டு தந்தை தலைமறைவாகிவிட்டார்.
கோவை மசக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வராணி- பத்பநாபன் தம்பதியினர். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15), ஸ்ரீஜா (10) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
குடும்பச் சண்டை
இந்த நிலையில் கணவன்- மனைவிக்குள் கடந்த 2 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதையடுத்து தகவல் தெரிவித்து போலீஸார் நேற்றிரவு அவர்களது வீட்டிற்கு வந்து பேசி சமரசம் செய்து கொள்ள கூறினர்.
தன்னுடன் இருக்க
பின்னர் செல்வராணி வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் பத்மநாபன் இரு குழந்தைகளுடன் வீட்டிலேயே தங்கிவிட்டார். குழந்தைகளை அனுப்புமாறு செல்வராணி கேட்டதற்கு அவர்கள் தன்னுடன் இருக்கட்டும் என பத்மநாபன் கூறிவிட்டார்.
போலீஸுக்கு தகவல்
இந்த நிலையில் காலை வீட்டுக்கு வந்து பார்க்கும்போது இரண்டு பெண் குழந்தைகளும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் செல்வராணி. பின்னர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.
பரபரப்பு
போலீஸார் விசாரணையில் இரு மகள்களையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிங்காநல்லூர காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.