செந்தில் பாலாஜி Vs அண்ணாமலை.. புயலை கிளப்பிய கொங்கு அரசியல்
கோவை: அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை.. நிரந்தர எதிரியும் இல்லை என்பார்கள். ஆனால் இதில் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் விதிவிலக்கு உண்டு. கரூரில் தொடங்கிய அவர்களின் அரசியல் மோதல் தற்போது கொங்கு மண்டலத்தில் யார் செல்வாக்கானவர் என்ற அடிப்படையில் மோதல் இன்னும் அதிகரித்துள்ளது.
திமுக செந்தில் பாலாஜி Vs பாஜக அண்ணாமலை மோதல் 2021 சட்டமன்ற தேர்தலில் தொடங்கியது. இந்த கரூர்காரர்களின் மோதல் தற்போது கொங்கு மண்டல அதிகார யுத்தத்தில் வந்து நிற்கிறது. அப்போது திமுக மாவட்டச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி இப்போது பவர்ஃபுல் அமைச்சராகிவிட்டார். அப்போது பாஜக மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை இப்போது மாநில தலைவராகிவிட்டார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை, டாஸ்மாக் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. 2021 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் தோல்வியடைந்த பிறகு அண்ணாமலையின் கவனமும் கோவையை நோக்கி திரும்பியது. மின்சாரத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக செந்தில் பாலாஜி மீது அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டினார். பதிலுக்கு அண்ணாமலையின் ரபேல் வாட்ச் பில் கேட்டு செந்தில் பாலாஜி வைத்த புகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருவரும் ஒருமையில் திட்டிக் கொண்ட நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அண்ணாமலை கோவை மீது இன்னும் அதிகம் கவனம் செலுத்தினார். அதேபோல சிறையில் இருந்தாலும் கோவை திமுகவின் கன்ட்ரோல் செந்தில் பாலாஜி வசமே இருந்தது.
எதிர்பார்த்ததை போலவே 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியின் வேட்பாளராக களமிறங்கினார். திமுகவில் செந்தில் பாலாஜியின் ஆசியை பெற்ற ராஜ்குமார் வேட்பாளராக களமிறங்கினார். "சிறையில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவின் தேர்தல் களத்தை வழிநடத்துகிறார்." என்று அண்ணாமலை பரபரப்பு புகார் வைத்தார்.
அண்ணாமலையின் பிறந்தநாளான ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் பிறந்தநாளில் கோவை தொகுதியில் அண்ணாமலைக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வியடைந்தார். திமுக பிரமாண்ட வெற்றி பெற்றது.
அண்ணாமலைக்கு எதிராக திமுக சிறப்பு வியூகங்களை அமைத்து பணியாற்றியது. ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாகவும், திமுக சற்று பலவீனமாகவும் இருந்தது. அப்படியிருக்கும்போது அண்ணாமலை வெற்றி பெற்றால் கொங்கு மண்டலத்தில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாகிவிடும். அது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதினர்.
அதனால் தேர்தல் வெற்றி விழாவை முப்பெரும் விழாவாக அதே கோவையில் கொண்டாடினர். திமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கி வெற்றி விழா வரை அனைத்து மேடைகளிலும் செந்தில் பாலாஜியின் பெயர் சத்தமாக ஒலித்தது. தேர்தலில் கோவை தொகுதி பொறுப்பாளராக பணியாற்றிய அமைச்சர் டிஆர்பி ராஜா சமீபத்தில், "ஆட்டை பிரியாணி போட்டது செந்தில் பாலாஜி தான். நான் தம் மட்டும் தான் போட்டேன்." என்று கூறியிருந்தார்.
செப்டம்பர் மாதம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது. மீண்டும் அமைச்சரவை.. மீண்டும் அதே இலக்கா.. மீண்டும் கோவை என்று பழைய பன்னீர்செல்வமாக கொங்கு பவர் பாலிடிஸ்க்குள் நுழைந்தார். அண்ணாமலையும் லண்டனுக்கு படிக்க சென்ற நிலையில் டிசம்பர் 1 ஆம் தேதி தமிழகம் திரும்பினார்.
தமிழகம் திரும்பியதும் அண்ணாமலை அதானி விவகாரத்தை கையில் எடுத்தார். முதலமைச்சர் - அதானி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பியவர் செந்தில் பாலாஜி குறித்து, "சரியான அப்பா அம்மாவுக்கு பிறந்திருந்தால் என் மீது வழக்கு போடுய்யா." என ஒருமையில் விமர்சித்தார். செந்தில் பாலாஜியும் மறுபக்கம், "அண்ணாமலை எதற்காக லண்டன் சென்றார். அவருடன் யாரெல்லாம் சென்றனர்." என்று கேள்விகளை அடுக்கினார்.
"சொந்த ஊரிலும் தோல்வி.. சென்ற ஊரிலும் தோல்வி.. அரசியலில் இருக்கவே தகுதி இல்லை." என்று அண்ணாமலையை விமர்சித்தார். திமுகவின் கொங்கு மண்டல முகமாக மாற செந்தில் பாலாஜி தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதேபோல பாஜகவை கொங்கு மண்டலத்தில் ஆழமாக கால் பதித்து அதன் மூலம் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற்ற அண்ணாமலை பணியாற்றி வருகிறார்.
கரூரில் இருந்த செந்தில் பாலாஜி மற்றும் அண்ணாமலை இருவருமே கோவையில் வீடு எடுத்து குடிபெயர்ந்துள்ளனர். கோவை வீடு தற்காலிகமாக இருந்தாலும் கொங்கு மண்டலத்தில் நிரந்தர இடம் பிடிப்பதையே இருவரும் இலக்காக வைத்துள்ளனர். இதன் தாக்கம் 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும்.












Click it and Unblock the Notifications