கோவையில் வீட்டு மனை வரன்முறை.. ஒரே நாளில் அரசு ஊழியருக்கு நடந்த சிக்கல்.. வேலைக்கும் ஆப்பு
கோவை: அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் வாங்கி கைதாகி சிறைக்கு சென்றால், அடுத்த 24 மணி நேரத்திற்குள் பணியிடை நீக்கம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான, கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சி செயலாளர் முத்துசாமி என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஊராட்சியில் வீட்டு மனைகளை அங்கீகாரம் செய்ய, தமிழ்நாடு அரசின் நகர மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் (Tamil Nadu Town and Country Planning Act, 1971) மற்றும் தொடர்புடைய விதிகளின்படி சில முக்கிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். பொதுவாக, இந்த செயல்முறை நிலத்தின் வகை, அதன் இருப்பிடம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் ஆகியவற்றைப் பொறுத்து இருக்கும்.

நிலம் எப்படி
குறிப்பாக சொல்வது என்றால், நிலத்தை அளவீடு செய்து, எல்லைகளைக் குறிக்கும் திட்ட வரைபடம். வீட்டு மனைகள், சாலைகள், பொது இடங்கள் (பூங்கா, விளையாட்டு மைதானம்) மற்றும் நீர்வழிகள் ஆகியவற்றைக் காட்டும் விரிவான வரைபடம். நிலம் விவசாய நிலம் இல்லை என்பதற்கான சான்றிதழ் அல்லது நிலத்தின் தன்மையைப் பற்றிய சான்றிதழ் ஆகியவற்றை அளிக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை போன்ற துறைகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் தேவைப்படும். இதெல்லாம் நடைமுறையில் உள்ளவை.
மனைகள் சாலைகள் எப்படி
அதேபோல் மனைகளுக்குள் செல்லும் சாலைகள் குறைந்தபட்சம் 24 முதல் 30 அடி அகலம் இருக்க வேண்டும். முக்கிய சாலைகள் இதைவிட அதிக அகலம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது விதியாகும். அதேபோல் மொத்த நிலப்பரப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் (பொதுவாக 10%) பொது இடங்களுக்காக (பூங்காக்கள், பொதுப் பயன்பாட்டு இடங்கள்) ஒதுக்கப்பட வேண்டும் இதுவும் விதிமுறைகளில் இருக்கிறது. அதேபோல் சாலைகளுடன், பாதசாரிகள் செல்லும் நடைபாதை மற்றும் மழைநீர் வடிகாலுக்கான வசதிகள் திட்டத்தில் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
வீட்டு மனை அங்கீகாரம்
எல்லாம் சரியாக இருந்தால், ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும். அனைத்து விதிகளும் சரியாக இருந்தால், ஊராட்சி அங்கீகாரத்தை வழங்கும். எனினும் சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால் தான் வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் தருவதாக புகார்கள் உள்ளது. அதேபோல் வீட்டுமனைகள் வரைமுறை செய்யவும் லஞ்சம் கேட்பதாக புகார்கள் சில இடங்களில் எழுகிறது. அப்படித்தான் ஊராட்சி செயலாளர் ஒருவர் மீது கோவையில் புகார் எழுந்தது. அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் வீட்டு மனை வரன்முறை
கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் கொண்டையம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் விக்ரம் ராஜ். இவரது மாமியார், மனைவி ஆகியோருக்கு சொந்தமான வீட்டுமனைகள் ஊராட்சியால் அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பத்தை விக்ரம்ராஜ் ஊராட்சி செயலாளர் முத்துசாமியிடம் வழங்கினார். உடனே முத்துசாமி, சம்பந்தப்பட்ட நிலத்துக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பரிந்துரை செய்யவும், வரன்முறைப்படுத்தி உத்தரவு வழங்கவும் ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் வாங்கியதாக கைது
இது குறித்து விக்ரம்ராஜ், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதை பெற்றுக்கொண்ட விக்ரம்ராஜ், அந்த ரூபாய் நோட்டுகளை முத்துசாமியிடம் வழங்கினார். அந்த பணத்தை அவர் வாங்கிய போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தார்கள்.
சஸ்பெண்ட்
இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் முறைப்படி மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான கொண்டையம்பாளையம் ஊராட்சி செயலாளர் முத்துசாமியை பணியிட நீக்கம் செய்து எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications