2 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை.. வெள்ளக்கடான சாலைகள்.. மிதக்கும் கோவை
கோவை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே இன்று தொடங்கி வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் 16 ஆம் தேதி சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 14 ஆம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும்.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15 - 16 ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக் கூடும். இதனால் இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரத்துக்கம் மேலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கவுண்டம்பாளையம், காந்திபுரம், உக்கடம், ராமநாதபுரம், வடவள்ளி, லாலிரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.
கோவையைப் பொருத்தவரை கடந்த ஒருவார காலமாகவே மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் குளுகுளு காலநிலை நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், இன்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் பிற்பகலில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது.
இதனால், பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பல பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். முக்கிய சாலைகளான கோவை மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை, சக்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் ஊர்ந்து செல்கின்றனர்.
சாயிபாபா காலனி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி கடல்போலக் காட்சியளித்தது. இதில், தனியார் பேருந்து ஒன்றும் சிக்கிய நிலையில், பேருந்து பாதியளவுக்கு தண்ணீரில் மூழ்கிய சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியது. மாநகராட்சி ஊழியர்கள் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
கோவை கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே பாலத்தில் மழை நீர் குளம்போல தேங்கியதால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக சாலையைக் கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனை கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மழை நீரை விரைவாக வெளியேற்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications